தாராபுரம் அ.ம.மு.க., வேட்பாளர் கலாராணி, தாமதமாக வந்த காரணத்தால், மனு தாக்கல் செய்ய முடியாமல் சென்றார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் கலாராணி நேற்று மனு தாக்கல் செய்வதாக, சப்-கலெக்டர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்தார்.
மதியம், 2:30 மணியளவில் சப்-கலெக்டர் அலுவலகம் முன், அ.ம.மு.க., நிர்வாகிகள் சிலர் காரில் வந்தனர். ஆனால், வேட்பாளர் வரவில்லை. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ‘சார் சீக்கிரம் உள்ள போங்க, நேரம் முடிய போகுது,’ என்றனர். ஆனால், கட்சியினர் கண்டுகொள்ளாமல் அங்கேயே நின்றனர்.
பொறுத்துப்பார்த்த ஒரு நிர்வாகி, வேட்பாளருக்கு தொடர்பு கொள்ள, ‘இதோ வந்துட்டேன். அதோ வந்துட்டேன்,’ என, வேட்பாளர் பதில் சொன்னார். ஆனால், வரவில்லை.
அப்போது, மணி மூன்றை தொட இரண்டு நிமிடம் இருந்தது. ஒரு கார் வந்தது. காரிலிருந்து வேட்பாளர் கலாராணி இறங்க முயன்றார். ஆனால், நிர்வாகிகள் ஓடிச்சென்று, ‘நேரம் முடிஞ்சிருச்சு. இனிமே, நாளைக்கு தான்’ என்றனர்.
இதை கேட்ட வேட்பாளர் வந்த வேகத்தில் ‘யூடர்ன்’ போட்டு திரும்பி சென்றார். கட்சியினர் ஏமாற்றத்துடன் புலம்பியபடி சென்றனர்.