அரசு பேருந்தை முந்திச்செல்ல முயன்று கர்ப்பிணி மனைவி மற்றும் ஒருவயது பச்சிளம் குழந்தையை தந்தை கண்முன்னே இழந்த சோகம் அரங்கேறியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தாயில்பட்டி கோட்டையூர் பகுதியை சார்ந்தவர் கருப்பசாமி. இவர் சிவகங்கையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சிவகாசி அருகேயுள்ள பாறைப்பட்டி பகுதியை சார்ந்த சுந்தரலட்சுமி (வயது 24) என்ற பெண்மணிக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் ஒரு வயதுடைய கவிபாரதி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், சுந்தரலட்சுமி 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்நிலையில், கவிபாரதியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முடிவெடுத்த தம்பதி, பாறைப்பட்டியில் உள்ள உறவினரின் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அங்கிருந்து மதிய நேரத்தில் சிவகாசிக்கு வந்த தம்பதி, சிவகாசியில் கேக் வாங்க முடிவு செய்துள்ளனர். தம்பதிகளுடன் உறவினரின் மகன் திவாகரும் உடன் வந்துள்ளார்.
அப்போது, இவர்களின் வாகனம் சிவகாசி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே வருகையில், சாத்தூரில் இருந்து சிவகாசி நோக்கி வந்த அரசு பேருந்தை கருப்பசாமி முந்திச்செல்ல முயற்சி செய்துள்ளார்.
இதன்போது, எதிர்பாராத விதமாக அரசு பேருந்தில் மோதி வாகனம் நிலைகுலையவே, பேருந்து சக்கரத்தில் சிக்கிய 7 மாத கர்ப்பிணி சுந்தரலட்சுமி மற்றும் 1 வயது மகள் கவிபாரதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வாகனத்தை இயக்கிய கருப்பசாமி மற்றும் உடன் வந்த உறவினரின் மகன் திவாகரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சிவகாசி காவல் துறையினர், விபத்தில் இறந்த கர்ப்பிணி தாய் மற்றும் மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சேகரை கைது செய்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக கருப்பசாமியின் உறவினர்களுக்கும், சுந்தரலட்சுமியின் உறவினர்களுக்கும் தகவல் தெரியவரவே, அனைவரும் புறப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு இருவரின் உடலையும் கண்டு உறவினர்கள் கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.