2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் வரும் ஏப்.6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக அமையாமல் இழுத்தடித்தது, இரு பெரும் கட்சிகள் தாங்களே அதிக இடங்களில் போட்டியிட முடிவு செய்தது, குறைந்த இடங்கள் என்பதால் தேசியக் கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்ய இயலாமல் இழுத்தடித்தது என ஒருவழியாக வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என பலரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 22ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கரூரில் 76 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சுயேட்சைகள் மட்டும் 59 பேர் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்ட பேரவை தேர்தலில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்கான தனது வேட்பு மனுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்கா அலுவலகத்தில் தாக்கல் செய்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி நாயக்கனூர் தொகுதியில் 33 பேர், திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 41 பேர், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியில் கோவை தெற்கில் 19 பேர், அமமுக தலைவர் தினகரன் கோவில்பட்டி தொகுதியில் 19 பேர் என போட்டியிடுகின்றனர்.