பத்துக்கும் மேற்பட்ட வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் உட்பட நான்கு பேரை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அவிநாசி, பெருமாநல்லூர், சேயூர், குன்னத்தூர், ஊத்துக்குளி, வெள்ளகோயில், நம்பியூர், கடத்தூர் மற்றும் வரப்பாளையம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்துள்ளது.
இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு பெருமாநல்லூர் அருகே பூலுவபட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படியாக மூன்று அதிவேக திறன் கொண்ட பைக்கில் வந்த இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதை அடுத்து, போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், பூலுவபட்டி பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகளான அரவிந்த் (வயது 21) மற்றும் யுவராஜ் (வயது 23), அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 19) மற்றும் கூடலூர் சேரம்பாடி பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 20) என்ற நான்கு பேரும், அவிநாசி, பெருமாநல்லூர், சேயூர், குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 26 சவரன் தங்க நகைகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட அதிவேக திறன் கொண்ட பைக்குகள் மூன்றும் பறிமுதல் செய்தனர்.
வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும்போது பொதுமக்கள் மற்றம் போலீசார் தங்களை விரட்டிப் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக வழிப்பறி செய்த பணத்தில் அதிவேக திறன் கொண்ட பைக்குகள் வாங்கியதும்,
மேலும், கொள்ளையடித்த பணத்தில் விலையுயர்ந்த நாய்கள் பண்ணை அமைக்கும் திட்டத்தில் இதுபோன்ற வழிப்பறிகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது.