தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இரு தினங்களுக்கு முன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று, வேட்புமனுக்கள் பரிசீலிக்கப் பட்டது குறித்து அறிவிப்பும் வெளியாகிவிட்டது.
முன்னதாக, அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு பரிசீலனையின் போது, நிறுத்தி வைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை அண்ணாமலை மறைத்திருப்பதாக திமுக., வழக்கறிஞர்கள் சிலர் சென்னையில் இருந்து வந்து புகார் எழுப்பினர்.
இதை அடுத்து, அண்ணாமலை வேட்புமனு பரிசீலனையின் போது நிறுத்தி வைக்கப்பட்டது. திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் தொடர்ந்து அண்ணாமலையின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், தகுந்த விளக்கங்களுக்குப் பின்னர், அண்ணாமலையின் வேட்பு மனு பரிசீலிக்கப் பட்டு, பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இன்று முற்பகல் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, என்ன பயந்துட்டியா குமாரு! அந்த ஆண்டவனே நம்ம பக்கம்.. என்று டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார் கே.அண்ணாமலை. இது இணையத்தில் வைரலானது.
‘என்ன பயந்துட்டியா குமாரு! அந்த ஆண்டவனே நம்ம பக்கம் ‘ என்பது ரஜினியின் புகழ்பெற்ற வசனம் என்பதால், ரஜினி ரசிகர்களும் இந்த ட்வீட்டை மறு பகிர்வு செய்து, தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.