அமமுக தொண்டர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூகார் அருகில் பட்டாசை கொளுத்திய சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை கிளப்பியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. அதேபோல் அங்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்றிரவு கோவில்பட்டியில் பிரச்சாரம் முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கார் மந்திதோப்பு சாலை வழியே கடக்கும் போது, அமமுக தென்மண்டல செயலாளர் மாணிக்கராஜா தேர்தல் பரப்புரைக்காக அங்கு வந்தார்.
அவரை வரவேற்க அமமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் வரவேற்றனர். அப்போது ஒருவர் பட்டாசை திடிரென்று அமைச்சரின் கார் டயரின் அருகே கொளுத்திவிட பட்டாசு சில நிமிடங்கள் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தில் காரை எடுக்க முடியாமல், அமைச்சர் கடம்பூர் ராஜூ சிக்கி கொண்டார்.
உடனே அங்கிருந்த போலீசார் போக்குவரத்தை சரிசெய்து அமைச்சரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் அமமுக – அதிமுக தொண்டர்கள் இடையே தகராறு உருவானது. ஆனால் அதற்குள் போலீசார் சமரசம் செய்து அங்கிருந்த கூட்டத்தை கலைத்தனர்.