ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை காலை ஷோபியான் மாவட்டத்தில் மணிஹால் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையின் போது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட அனைவரும் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரியவந்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான பகை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஒருபுறம் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வரும் அதே நேரத்தில், அந்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவி இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி முயற்சி செய்து வருகின்றன.
ஆனால் இந்திய பாதுகாப்பு படையினர் கண்கொத்தி பாம்பாக இருந்து அம்முயற்சிகளை முறியடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி அசம்பாவிதத்தில் ஈடுபட முயற்சி செய்த 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்று காலை ஜம்மு-காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் மணிஹால் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் சிலர் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த வீட்டை முற்றுகையிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர் அப்போது அந்த வீட்டுக்குள் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கினர்.
உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தினர். அப்போது வீட்டுக்குள் இருந்த 4 தீவிரவாதிகள் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த மோதல் பலமணி நேரம் நீடித்தது.
இது குறித்து தெரிவித்த காஷ்மீர் மண்டல காவல்துறை அதிகாரி, நடந்த துப்பாக்கி மோதலில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என கூறியிருந்தார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காஷ்மீர் ஐஜி விஜயகுமார், ஷோபியானில் லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையே சந்திப்பு நடந்தபோது இந்த அதிரடி ஆபரேஷன் நடத்தப்பட்டது. தற்போது அனைத்து பயங்கரவாதிகளும் கொள்ளப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும், மொத்தத்தில் இதுவரை நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் 16 அன்று ஷோபியானில் இதேபோன்ற மற்றொரு மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.