ஏப்ரல் 1-ம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..
இந்தியா தற்போது கொரோனாவின் 2-வது அலையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 40,000-க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், சத்தீஸ்கர், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் மட்டும் சுமார் 80% கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது..
இதனிடையே தடுப்பூசி போடும் பணிகளும் இந்தியாவில் தொடர்ந்து வருகிறது.
முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வரும் 1-ம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டார், தகுதியுள்ள அனைவரையும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
நேற்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ஏப்ரல் 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை சீக்கிரம் எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனாவுக்கு எதிராக கேடயம் செய்கிறார்கள், “என்று ஜவடேகர் கூறினார்.