உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் இயந்திரங்களின் மூலம் பெறுவது பொதுவான ஒன்றே. ஆனால் அதற்கு முன்பு உங்கள் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை அறிவது மிக மிக கட்டாயமான ஒன்று.
கணக்கில் இருக்கும் தொகையை விட அதிகமான தொகையை ஏடிஎம்மில் போடுவதன் மூலம் அது தோல்வியடைந்த பரிவர்த்தனையாக (Failed Transaction) மாறிவிடுகிறது. உதாரணமாக உங்கள் கணக்கில் 4 ஆயிரம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அதைக் கவனிக்காமல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வேண்டும் என்று ஏடிஎம்மில் பதிந்தால் அது Failed Transaction.
சரி இதனால் என்ன மறுபடியும் பேலன்ஸை பார்த்துவிட்டு இருக்கும் தொகையை எடுத்துக்கொள்ளலாமே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு
அதாவாது 2020 டிசம்பர் மாதம் முதல் அனைத்து வங்கிகளும் பண பரிவர்த்தனை விதிகளை மாற்றியமைத்தன. ஒவ்வொரு Failed Transaction-க்கும் உங்கள் கணக்கிலிருந்து அபராதம் பிடிக்கப்படும் என்பது அதில் ஒரு விதி. ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு தொகையை அபராதமாகப் பிடித்தம் செய்கின்றன. அதைக் கீழே தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியாவிலேயே இருக்கும் மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐயும் ஒன்று. ஒவ்வொரு Failed Transaction-க்கும் 20 ரூபாய் அபராதம் வசூலிக்கிறது. தவிர ஜிஎஸ்டி வரியும் பிடித்தம் செய்யப்படும். எப்படியும் 25 ரூபாய்க்கு மிகாமல் வாடிக்கையாளர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
நீங்கள் ஹெச்டிஎஃப்சி உள்பட அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் உங்களது Failed Transaction-க்கு 25 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். அதேபோல கொடெக் மஹேந்திரா, யெஸ், ஆக்சிஸ் ஆகிய வங்கிகளும் வாடிக்கையாளர்களிடமிருந்து 25 ரூபாய் அபராதம் வசூலிக்கின்றன.
நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்று நினைப்பதுடன் உங்களது கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்பதையும் சேர்த்து பார்த்துவிட்டாலே போதும். ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு முன் அந்த ஏடிஎம்மிலேயே ஒரு முறை உங்களது பேலன்ஸை பார்த்துவிடுங்கள்.
இப்போது பெரும்பாலான வங்கிகள் எஸ்எம்எஸ் மூலமே உங்களது பேலன்ஸை பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. தவிர பிரத்யேகமாக தனி செயலிகளும் இருக்கின்றன. அதேபோல போன் பே, கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளிலும் உங்களது பேலன்ஸை பார்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. உங்கள் கைகளில் பல வசதிகள் இருக்கின்றன. நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் அவ்வளவே.
உங்களது வங்கி தவிர்த்து மற்ற வங்கி ஏடிஎம்களில் பேலன்ஸ் பார்ப்பதற்கும் அபராதம் வசூலிக்கப்படும். பேலன்ஸ் பார்ப்பது மட்டுமல்லாமல் பணம் எடுப்பதற்கும் அபராதம் உண்டு. ஒவ்வொரு வங்கியும் 5 முதல் 8 பரிவர்த்தனைகளுக்கு அபராதம் வசூலிப்பதில்லை. அதற்கு மேல் சென்றால் ஜிஎஸ்டி வரியுடன் அபராதம் பிடிக்கப்படும். எஸ்பிஐயில் 8 முதல் 10 ரூபாய் வரை வசூலிக்கிறது.