
கேழ்வரகு கிரிஸ்பி லட்டு:
கரகர மொறுமொறு கிரிஸ்பி மிட்டாய்கள் கடையில்தான் கிடைக்குமா என்ன? வீட்டிலேயே அப்படியொரு கிரிஸ்பியான பண்டம் செய்ய முடியும். அதுவும் கேழ்வரகில்! கேழ்வரகு மாவை பூரிக்குப் பிசைவதுபோல் துளி உப்புநீர் விட்டு பதமாகப் பிசைந்து, எண்ணெயில் பூரிகளாகச் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
அந்தப் பூரியை மிக்ஸியில் பொடித்து, அதோடு ஏலப்பொடி, வறுத்த முந்திரி கலந்து கெட்டியான வெல்லப் பாகு, நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடித்தால், கேழ்வரகு கிரிஸ்பி லட்டு ரெடி.
இன்னொரு முறை
கேழ்வரகு மாவு – 1 கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 கப் (துருவியது)
நெய் – 2 மேசைக்கரண்டி
முந்திரி – 1 தேக்கரண்டி
கருப்பு எள் – தேக்கரண்டி
திராட்சை – 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
சுக்கு தூள் – 1 சிட்டிகை
செய்முறை :
வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். (வெல்லம் கரையும் வரை வைத்தால் போதுமானது)
எள்ளை வெறும் கடாயில் வறுத்து கொள்ளவும். நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.
கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும். சுண்ணாம்பு, இரும்பு, புரதம் நிறைந்த லட்டு தயார்