திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. வருகின்ற 28ஆம் தேதி காலை 3.12இல் இருந்து 29ஆம் தேதி காலை 1.18 வரை பௌர்ணமி நேரத்தில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம், அருணகிரியைச் சுற்றி கிரிவலம் வருவதற்கு கொரோனா பரவலைக் காரணம் காட்டி, மாவட்ட நிர்வாகம் தடை பிறப்பித்துள்ளது.
கட்டுக்குள் வந்த கொரோனா பரவல் மீண்டும் உருமாறிய கொரோனாவாக, தேர்தல் நேரத்தில் ஏற்பட்டுவிட்ட மக்கள் நெருக்கடி மற்றும் பிரசாரங்களுக்கு அழைத்து வரப்படுகின்ற மக்களின் நெருக்கம் காரணமாகவும், குடும்ப விழாக்களில் கலந்து கொள்ளும் நபர்களின் மூலமும் மீண்டும் பரவி வருகிறது.
இந்நிலையில், கோயில்களில் கூட்டம் கூடுவதைத் தடுக்கவும், விழாக்களில் கலந்து கொள்பவர்கள் மூலம் கொரோனா பரவலைத் தடுக்கவும் அரசு மீண்டும் கோயில் தரிசனத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அண்ணாமலை கிரிவலத்துக்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருக்கிறது.
- SRV பாலாஜி, திருவண்ணாமலை