ஆன்லைன்’ வாயிலாக, பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் சுருட்டிய, ‘டுபாக்கூர்’ தொழிலதிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
சென்னை, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் வெளிநாட்டு தொலைபேசி எண் வாயிலாக, சையது அபுதாகிர் மற்றும் சையது அலி ஹுசைன் ஆகியோர், தனித்தனியாக தொடர்பு கொண்டனர்.
அப்போது, டெல்டின் இண்டர்நேஷனல் சொல்யூஷன் என்ற, எங்கள் நிறுவனத்தில், ‘ஆன்லைன்’ அன்னிய செலாவணி பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்குமென கூறினர்.
இவர்களை நம்பி, கிரெடிட் கார்டு மூலம், 10.54 லட்சம் ரூபாயை கொடுத்தேன். அதன் பின், லாபத் தொகையையும் தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இருவர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரித்த, மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சையது அபுதாகிர், 34; கடலுார் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த சையது அலி ஹுசைன்,40, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில், சையது அபுதாகிர், எம்.எஸ்சி.,யும், சையது அலி ஹுசைன், பொறியியல் படித்து உள்ளதும் தெரிந்தது. மோசடி குமபலான இவர்கள், பல்வேறு நிறுவனங்கள் பெயரில் இணைய பக்கம் துவங்கி, வெளிநாட்டு தொழிலதிபர்கள் போல நடித்துள்ளனர்.
தங்களிடம் சிக்கும் நபர்களிடம், ‘ஆன்லைன்’ வாயிலாக, அன்னிய செலாவணி பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் சுருட்டியதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 1.95 லட்சம் ரூபாய், 5 மொபைல் போன் மற்றும் மடிக்கணினியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.