ஆந்திராவில் ஒரு காதல் ஜோடி பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் ஓங்கோல் பகுதியை சேர்ந்தவர் விஷ்னுவர்தன் ரெட்டி (22). இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் நாகினேனி இந்து(18) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.
இருவரும் பழக ஆரம்பித்ததில் காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவரவே இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பிரிந்தும் வாழ முடியாது, பெற்றோர்களும் திருமணத்திற்கு சம்மதிக்க வாய்ப்பு இல்லை என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதன்படி திங்கட்கிழமை கல்லூரிக்கு சென்ற விஷ்ணு வீடு திரும்பவில்லை. அன்றைய நாள் இரவு, சுமார் 10.30 மணிக்கு பால் வாங்கி வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியேறிய இந்துவும் வீடு திரும்பாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் மறுநாள் காலை சுராரெட்டி ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் ஆண், பெண் சடலம் இருப்பதாக அந்த பகுதி கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் அங்கு சென்று அது விஷ்ணு, இந்து தான் என கண்டறிந்து அவர்கள் வீட்டிற்கு தகவல் கொடுத்துவிட்டு உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.