மத்திய பிரதேசத்தில் ஒரு கணவர் தன் மனைவி மீது இருந்த சந்தேகத்தில் அவரது இரண்டு கைகளையும் வெட்டி காட்டில் விட்டு விட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் ரத்தீர். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் காதலித்து வந்த பெண்ணை பெண் வீட்டாரின் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் திருமணம் ஆன 15 நாட்களிலேயே ரத்தீர் அந்த பெண்ணின் நடத்தையை சந்தேகித்துள்ளார். அந்த பெண் வேறு ஒரு ஆணுடன் பேசுவதாக கூறி அவரிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அந்த பெண்ணை ஒரு காடு பகுதிக்கு அழைத்து சென்று அவரை கோடாரியால் தாக்கி இரண்டு கைகளையும் வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த பெண்ணை அப்படியே விட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை மீட்ட வழிபோக்கர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 9 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த பெண்ணின் கைகள் ஒட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் நான்கு நாட்களுக்கு பிறகு தான் கையின் செயல்பாடு இருக்குமா இல்லையா என்பதை சொல்லமுடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் பெண் வீட்டார் அவரை காண வரவில்லை. இருப்பினும் அந்த பெண்ணின் மாமனார் பரமாரிப்பில் தற்போது அந்த பெண் இருந்து வருகிறார்.