விராலிமலை சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அவர் பிரச்சாரத்தின்போது பேசுகையில், விராலிமலை தொகுதி மக்களாகிய உங்களுக்கு மழை, புயல், வெயில் காலங்களிலும், கொரோனா காலத்திலும் ஓடோடி வந்து உதவி செய்துள்ளேன். தொடர்ந்து உதவி செய்வேன் என தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாகவே விஜயபாஸ்கர் தனது மகள்களை பேசவைத்து வாக்குச் சேகரித்துவருகிறார்.
இந்தநிலையில் அமைச்சரின் இளைய மகள் அனன்யா விராலிமலை தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அமைச்சரின் மகள் அனன்யா பேசுகையில், நான் விஜயபாஸ்கரோட ரெண்டாவது மகள். எல்லாருக்கும் வணக்கம். தொடர்ந்து மழலைக் குரலில் பேசிய அமைச்சரின் மகள் அனன்யா, மக்களுக்கு ஏதாச்சும் ஆகிருச்சுன்னா எங்க அப்பா துடிச்சிப்போயிடுவாரு.
உங்களுக்கு காது கேக்கலைன்னா காது மெஷினா வருவாரு. கண்ணு தெரியலைன்னா கண்ணாடியா வருவாரு. கஜா புயல்னா கரன்ட்டா வருவாரு. கொரோனான்னா மருந்து, மாத்திரையா வருவாரு. பொங்கல்னா சீரா, சிறப்பா வருவாரு. தீபாவளி, பொங்கலைக்கூட எங்களோட செலிபிரேட் பண்ணாம, உங்ககூடதான் பண்ணணும்னு நினைப்பர்.
அவரை எனது அப்பா என்று சொல்வதைவிட உங்க வீட்டுப் பிள்ளைன்னுதான் சொல்லணும். உங்க வீட்டுப் பிள்ளைக்கு இரட்டை இலைச் சின்னத்தில் ஓட்டுப் போடுவீங்களா? என வாக்குச் சேகரித்தார். அப்பகுதி மக்களும் அதிகப்படியான ஆதரவு அளித்தனர்.