திமுகவினர் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி வாக்களித்தால் 5 வருடங்களுக்குப் பிறகு ஒரு ஊருக்கு இரண்டு வீடுகள் மட்டுமே இருக்கும் ஏனென்றால் அனைவரும் இந்த ஊரை காலி செய்து விட்டு சென்று விடுவார்கள். எனவே பொது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் பாஜக., மாநில துணைத் தலைவருமான அண்ணாமலை பேசினார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை கா. பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடந்தூர், வெட்டுகட்டுவலசு, வடகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்
அப்போது, பொதுமக்களிடையே வாக்கு சேகரித்துப் பேசிய அண்ணாமலை, நானும் ஒரு விவசாயிதான். இதே பகுதியைச் சார்ந்தவர் தான்! உறுதியாக ஒன்று சொல்கிறேன்… அரவக்குறிச்சி தொகுதியில் மீண்டும் திமுக.,வுக்கு ஓட்டளித்து வெற்றி பெறச் செய்தால் கோமணம் கட்டும் நிலைமைதான் விவசாயிகளுக்கு வரும்!
சட்டமன்ற உறுப்பினரின் வேலை என்னவென்றால் ஐந்து வருடங்களுக்கு எங்கிருந்து நிதிகளைக் கொண்டு வரவேண்டும், தண்ணீர் எங்கிருந்து கொண்டு வர வேண்டும், விவசாயத்திற்கு எங்கிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும், குடிநீருக்கு எங்கிருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும்… இதுதான் சட்டமன்ற உறுப்பினரின் வேலை! திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி தற்போது கரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அங்கே பிரச்சாரத்தின்போது வீட்டிக்கு வீடு வேலை தருவதாக பொய்யான வாக்குறுதிகளை கூறி வருகிறார் அதனால் இந்த முறை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை யோசித்து வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.
திமுகவினர் சமூக நீதி என்று சொல்வார்கள்… ஆனால் முதல்முறையாக இஸ்லாமியரை குடியரசுத் தலைவர் ஆக்கியது பாஜக தான்! பிஜேபி இஸ்லாமியருக்கு எதிரான கட்சி என்று பொய்யான விமர்சங்களை செய்து வரும் திமுக மற்றும் காங்கிரஸ், ஓர் இஸ்லாமியரை மீண்டும் குடியரசுத் தலைவர் ஆகவிடாமல் தடுத்தது. தற்போது இருக்கும் குடியரசுத் தலைவர் கூட தலித் சமுதாயத்தைச் சார்ந்தவர் தான்! அவரை குடியரசுத்தலைவர் ஆக்கியதும் பிஜேபி தான்!
திமுகவினர் சமூகநீதிப் போராளிகள் என கூறி வருகின்றனர் ஆனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரைக் கூட மாவட்ட செயலாளராக நியமித்தது இல்லை! திமுகவினர் ஒரு எம்எல்ஏ சீட்டுக்குக் கூட முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு… அதாவது தற்பொழுது நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட திமுக., தன் கட்சி சார்பில் ஒரு இஸ்லாமியரைக் கூட அறிவிக்க வில்லை! கூட்டணி வேட்பாளராக முஸ்லிம்கள் இருக்கலாம்… ஆனால் திமுக வேட்பாளர்களில் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் எவருமில்லை
திமுகவினரின் பொய்ப் பிரச்சாரத்தை நம்பி வாக்களித்தால் 5 வருடங்களுக்குப் பிறகு ஒரு ஊருக்கு இரண்டு வீடுகள் மட்டுமே இருக்கும்! ஏனென்றால் அனைவரும் இந்த ஊரை காலி செய்து விட்டு சென்று விடுவார்கள். எனவே பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்! அதிமுக., கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக.,வுக்கு வாக்களிக்கும் பட்சத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் மாற்றங்கள் கொண்டு வரப்படும்! எனவே அனைவரும் பாஜகவிற்கு தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.!