இன்று 28 மார்ச் 2021 ஞாயிற்றுக்கிழமை ஹோலிகா பௌர்ணமி, மதன பவுர்ணமி, டோலோற்சவம், லக்ஷ்மி ஜெயந்தி, பிரம்ம ஸாவர்ணிக மன்வாதி, சைதன்ய மகாபிரபு ஜெயந்தி ஆகிய புண்ணிய தினங்கள் ஒன்றான சுபவேளை.
ஹோலிகா பூர்ணிமா:
காலையில் எழுந்து குச்சிகளையும் வரட்டிகளையும் அடுக்கி அக்னி மூட்டி அதில் ராக்ஷஸ பீடை தொலைவதற்காக ஹோலிகா என்று சக்தியை ஆவாகனம் செய்து, “ஸ்ரீ ஹோலிகாயை நமஹ”, என்று பூஜை செய்து மூன்று முறை பிரதட்சணம் செய்து, “வந்திதாசி சுரேந்த்ரேண ப்ரஹ்மணா சங்கரேண ச, அதஸ்த்வாம் பாஹினோ தேவி பூதே பூதி ப்ரதோ பவ” என்ற ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்திக்க வேண்டும்.
டோலோத்ஸவம்:
பாலகிருஷ்ணனை அல்லது ராதாகிருஷ்ணனை ஊஞ்சலில் வைத்து இன்று வழிபட வேண்டும். இதனைச் செய்வதால் வைகுண்ட பிராப்தி கிடைக்கிறது. “நரா: டோலாகதம் த்ருஷ்ட்வா கோவிந்தம் புருஷோத்தமம், பால்குண்யாம் ப்ரியதோ பூத்வா கோவிந்தஸ்ய புரம் வ்ரஜேத்” என்ற ஸ்லோகத்தைச் சொல்லி ஊஞ்சலை ஆட்ட வேண்டும்.
லக்ஷ்மி ஜெயந்தி:
பாற்கடலிலிருந்து லக்ஷ்மி தேவி தோன்றிய நாளான இன்று ஸ்ரீ லக்ஷ்மி தேவியை வழிபடுவதால் அம்மனின் அனுக்கிரகத்தை பெறமுடியும்.
ஶ்ரீசைதன்ய மஹாப்ரபு ஜெயந்தி:
ஸ்ரீ கிருஷ்ண பக்தி சாம்ராஜ்யத்தின் அதிநேதாவான ஸ்ரீசைதன்ய மஹாபிரபு பிறந்த நாளான இன்று அவருடைய கதாம்ருதத்தை படிப்பதாலும், நாம சங்கீர்த்தனம் செய்வதாலும் பரமாத்மாவின் அருள் கிடைக்கிறது.
(நன்றி- ருஷிபீடம் மாத இதழ் மார்ச் 2021)