சிஷ்யர்: அஹிம்சை சாஸ்திரங்களில் உபதேசிக்கப்பட்ட இருக்கிறதே எப்பொழுதும் அதை அனுஷ்டிவக்க வேண்டுமா?
ஆச்சார்யாள்: சாஸ்திரங்களில் விரதங்கள் மகாவிரதங்கள் என்று இரு வகைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மகாவிரதம் என்பது எல்லா சமயங்களிலும் எந்த சூழ்நிலையிலும் அனுஷ்டிக்கப்பட வேண்டியது. சாமானிய விரதங்களை கால நியமங்களும் சூழ்நிலை நியமங்களும் பார்த்து அனுஸரிக்க முடியும். சன்யாசிகள் அகிம்சையை மஹாவிரதமாக அனுஷ்டிக்க வேண்டும் மற்ற அனைவருக்கும் அகிம்சை என்பது சாமான்ய தர்மம், கருணை இல்லாதவன் மனிதனே இல்லை. எல்லோரும் மற்றவர்களுக்கு அவசியம் கருணை காட்ட வேண்டும்.
சிஷ்யர்: சில பூச்சிகளை நம்மை அறியாமலே கொன்று விடுகிறோம் இதுபோன்ற சமயத்தில் அகிம்சையை எவ்வாறு முழுவதும் அனுசரிப்பது?
ஆச்சாரியாள்: அகிம்சை பற்றி நான் கூறியது வேண்டும் என்றே பிறருக்கு இழைக்கப்படும் துன்பம் பற்றித்தான். மனதால் ஒருவருக்கு துன்பம் நினைத்தாலும் அதுவும் அஹிம்சையைக் கடைபிடிக்காதது போல் தான்.
சிஷ்யர்: அகிம்சை என்பதற்காக ஒரு தேளோ பாம்போ ஒருவனை விஷம் கொண்டு துன்புறுத்த வந்தால் அதையும் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?
ஆச்சார்யாள்: இல்லை அப்பாம்பையோ தேளையோ நம் உடலை விட்டு உதறி அவற்றை விலக்கி விடலாமே!
சிஷ்யர்: அப்படி செய்தால் அகிம்சைக்கு விரோதமாக நடந்து கொண்டது போல் ஆகாதா?
ஆச்சார்யாள்: இல்லை ஏனென்றால் ஒருவன் தன் உடலைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தான் அவ்வாறு செய்தான். எந்தப் பிராணியையும் வீணாக ஹிம்சை செய்யவில்லை.
சிஷ்யர்: ஒருவர் மிகவும் சாதுவாக இருந்துவிட்டானானால் மற்ற மனிதர்கள் இதைப் பயன்படுத்தி அவனை ஏமாற்ற மாட்டார்களா? அவனுக்கு பலவிதமாக துன்பம் கொடுக்க மாட்டார்களா?
ஆச்சாரியாள்: மிகவும் சாதுவாக இருந்து வரவேண்டும் என்று கூறவில்லை. சன்யாசி எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். லௌகீக வாழ்வில் ஈடுபட்டவன் இம்மாதிரி நடந்து கொள்ள முயற்சி செய்தால் துன்பத்தில் மாட்டிக் கொள்ளலாம்.
சிஷ்யர்: அப்படி என்றால் ஒருவன் மற்றொருவனுக்கு வீணாக துன்பம் கொடுத்தோ வெறுப்பு உண்டாக்கவோ செய்தால் அவனை என்ன செய்ய வேண்டும்?
ஆச்சாரியாள்: ஒருவன் மனதில் முழுமையான அமைதியுடன் தான் இருந்து கொள்ள வேண்டும். ஆனால் ஏதோ சற்று எதிர்ப்பது போல் நடிக்கலாம்
சில சமயங்களில் கோபம் வந்தாற்போல் நடிக்கலாம். ஆனால் மனதில் கோபத்திற்கு சிறிதளவும் இடம் கொடுக்கக் கூடாது. இப்படி நான் சொல்வதிலிருந்து எப்போதும் கோபம் வருவதை போல் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பொருள் இல்லை. முடிந்த அளவிற்கு பொறுத்துக்கொண்டு ஓரளவுக்கு மேல் போனால் கோபம் வந்தது போல் நடிக்கலாம் அவ்வளவுதான்.
சிஷ்யர்: போரிலிருந்து வந்த நான் யுத்தத்தில் பலர் இறக்க காரணமாய் இருந்ததால் பாவத்திற்கு ஆளாவேனா?
ஆச்சார்யாள்: இல்லை
சிஷ்யர்: கொல்வது கூடாது அல்லவா?
ஆச்சாரியாள்: நீ ஒருவனை உனது வெறுப்பினால் கொன்றாயா?
சிஷ்யர்: இல்லை
ஆச்சார்யாள்: நீ உன் கடமையை செய்தாய் உனக்கு இடப்பட்ட உத்தரவின்படி நடந்து கொண்டாய். நாட்டுக்காக அச்செயல் புரிந்தாய் அப்படித்தானே.
சிஷ்யர்: ஆம்
ஆச்சார்யாள்: அதனால்தான் நான் பாவம் உன்னைச் சேராது என்று கூறினேன். நீ வெறுப்பினால் உனது சொந்த நன்மைக்காக ஒருவனை கொன்றால் உனக்கு பாவம் நிச்சயமாக வந்திருக்கும். நாட்டுக்காக உன் கடமையை செய்தாய். ஆகையால் பாவம் உன்னைச் சேராது. இதைத்தான் கிருஷ்ண பரமாத்மா கீதையில் அர்ஜுனனை நோக்கி க்ஷத்திரியனுக்கு யுத்தம் செய்வது மிகவும் நல்லது பாவமில்லை என்று கூறியுள்ளார். நீங்களெல்லாம் க்ஷத்ரிய ஸ்தானத்தில் அல்லவா இருக்கிறீர்கள்.