விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒட்டனந்தல் கிராம வனப்பகுதியில் இரட்டை குன்றின் மீது பழமை வாய்ந்த ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலின் கருவறையில் முருகன் சிலை இல்லாமல் வேல் மட்டுமே இருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.
கோவிலில் சாமிக்கு படைக்கப்பட்ட எலுமிச்சை கனிகளை ஏலம் எடுத்து அதை பிரசாதமாக சாப்பிட்டால் திருமண தடை நீங்கும், பிள்ளை வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நோய்கள் நீங்கும், காரிய தடைகள் நீங்கி வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை. ரத்தினவேல் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் ஏலம் விடப்பட்ட 9 எலுமிச்சம்பழங்களை 1 லட்சத்து 43 ஆயிரத்து 900 ரூபாய்க்கு பக்தர்கள் ஏலம் எடுத்துள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சின்ன மயிலம் என்றும் இரட்டை குன்றின் மீது அமைந்துள்ளதால் இரட்டை குன்று முருகன் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முதல் 9 நாட்களுக்கு நடைபெறும் திருவிழாவின் போது இரட்டை குன்றின் மீது அமைந்துள்ள முருகன் அருகில் வைக்கப்பட்டுள்ள வேல் மீது ஒவ்வொரு நாளும் ஒரு எலுமிச்சை பழம் வீதம் 9 நாட்களும் வைத்து பூஜை செய்யப்படும். இந்த பழங்கள் 11ஆம் நாள் விழா இரவில் ஏலம் விடப்படுவது வழக்கம்.
ஏலம் போன எலுமிச்சம்பழங்கள்
நம்பிக்கைதான் வாழ்க்கை அந்த நம்பிக்கைதான் பலரையும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது. கோவிலில் பிரசாரமாக கொடுக்கும் எலுமிச்சை கனியையும் கருவாடு சாத பிரசாதத்தையும் சாப்பிட்டாது தடைகள் நீங்கி நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் பலரும் இந்த கோவிலில் நடைபெறும் ஏல நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இதனால் அப்பகுதியினர் ஏலம் விடப்படும் எலுமிச்சை பழத்தினை எடுக்கும் முறையை கடந்த 50 வருடங்களாக கடைப்பிடித்து வருகின்றனர்.
திங்கட்கிழமையன்று இரவு எலுமிச்சை பழங்கள் ஏலம் விடப்பட்டது. ஏலம் விடும் முன்பாக இடும்பன் சாமிக்கு கருவாடு சோறு படையல் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று நள்ளிரவு 12மணிக்கு கோவிலின் பூசாரி சிலை முன்பாக ஆணி செருப்பில் நின்றவாறு பூஜையில் வைக்கப்பட்ட 9 எலுமிச்சை பழங்களை ஏலம்விட்டார்.
எலுமிச்சம் பழங்களை ஒவ்வொன்றாக நாட்டாண்மை பாலகிருஷ்ணன் ஏலம் விட்டார். ஏலம் தொடங்கியவுடன் முருகனின் வேலில் திருவிழாவின் முதல் நாளன்று குத்தி வைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் ஏலம் விடப்பட்டது. இதனை ஏராளமானோர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். இதனால் ஏலத்தொகை உயர்ந்து கொண்டே போனது.
முதல் நாள் எலுமிச்சை பழத்தை கடலூர் கூத்தப்பாக்கம் நாராயணன்- வளர்மதி தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி ரூ.59 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர். ஏலம் எடுப்பவர்களுக்கு எலுமிச்சை பழத்துடன் ஒரு உருண்டை கருவாடு சாதம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2ஆம் நாள் பழத்தை முதலூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி ரூ.19 ஆயிரத்துக்கும், 3ஆம் நாள் பழத்தை டி.கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி ரூ.25 ஆயிரத்துக்கும் எடுத்தனர். இதேபோல் 4ஆம் நாள் பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை ஆரோவில் தம்பதியினர் ரூ.14 ஆயிரத்து 500க்கும், 5ஆம் நாள் பழத்தை புதுச்சேரி சண்முகாபுரத்தை சேர்ந்த தம்பதியினர் ரூ.11 ஆயிரத்துக்கும் ஏலம் எடுத்தனர்.
6ஆம்நாள் பழத்தை கடலூர் சாவடியை சேர்ந்த தம்பதியினர் ரூ.2 ஆயிரத்து 300க்கும், 7ஆம் நாள் பழத்தை கிழக்குமருதூர் தம்பதியினர் ரூ.5 ஆயிரத்துக்கும், 8ஆம் நாள் விழா பழத்தை ஒட்டனந்தல் தம்பதியினர் ரூ.4 ஆயிரத்து 200க்கும், 9ஆம் நாள் விழா பழத்தை செட்டிப்பாளையம் தம்பதியினர் ரூ.3 ஆயிரத்து 900-க்கும் ஏலம் எடுத்தனர். இதன் மூலம் மொத்தம் 1 லட்சத்து 43 ஆயிரத்து 900 ரூபாய்க்கு எலுமிச்சை பழங்கள் ஏலம் போனது.
உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏலம் எடுத்தனர். குழந்தையில்லாத தம்பதியினர், வியாபாரம் செய்பவர்கள், வீடுகட்ட முயல்பவர்கள், தொழில் செய்ய முனைவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் என பலர் தங்கள் குறைகள் தீரும் என்ற நம்பிக்கையில் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டில் எலுமிச்சை பழங்களை ஏலம் எடுத்தவர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நம்பிக்கையுடன் இறைவனை நாடினால் வரம் கிடைக்கும் என்று இந்த விழாவில் பங்கேற்ற பக்தர்கள் கூறினர்.