தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் தாமதமாக இயங்கின. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இது குறித்து ரயில்வே துறை வெளியிட்ட அறிக்கை:
திருமங்கலம் – துலுக்கபட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய இரட்டை ரயில் பாதையின் இணைப்பு பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது வரை மின் அடிப்படையில் ரயில் இயக்கம் நடைபெற்று வந்தது. தற்போது ரயில் இயக்கம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
கணினி மயம் ஆக்கும் பணியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னை செல்லும் கொல்லம், பொதிகை, கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி, செந்தூர் சிறப்பு ரயில்கள் மற்றும் நாகர்கோவில் – பெங்களூர் சிறப்பு ரயில்கள் ஆகியவை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் கொல்லம், பொதிகை முத்துநகர் அனந்தபுரி செந்தூர் சிறப்பு ரயில்கள் மற்றும் கோவை – நாகர்கோவில் பெங்களூர் – நாகர்கோவில் டெல்லி நிஜாமுதீன் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
அதிகாலை 3 மணியிலிருந்து ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டு வருகின்றன. இன்று திருச்சியில் இருந்து புறப்பட்ட வண்டி எண் 02627 திருச்சி – திருவனந்தபுரம் பகல் நேர சிறப்பு ரயில் கொடைரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் வண்டி எண் 06351 மும்பை – நாகர்கோவில் சிறப்பு ரயிலில் மாற்றி ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல நேற்று மைசூரில் இருந்து புறப்பட்ட வண்டி எண் 06236 மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயிலில் பயணம் செய்த பயணிகள் மதுரையில் வண்டி எண் 02693 சென்னை – தூத்துக்குடி முத்துநகர் ரயிலில் மாற்றி ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருமங்கலம் ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வண்டி எண் 02628 திருச்சி – திருவனந்தபுரம் பகல்நேர சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
வண்டி எண் 06321/06322 நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் சிறப்பு ரயில் திருநெல்வேலி – திண்டுக்கல் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இன்று இன்று திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட வண்டி எண் 06072 திருநெல்வேலி – தாதர் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06340 நாகர்கோவில் – மும்பை சிஎஸ்டி சிறப்பு ரயில் ஆகியவை திருவனந்தபுரம், ஷோரனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட வண்டி எண் 06343 திருவனந்தபுரம் – மதுரை அமிர்தா சிறப்பு ரயில் மற்றும் இன்று மதுரையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06344 மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில் ஆகியவை திண்டுக்கல் மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06235 தூத்துக்குடி – மைசூர் சிறப்பு ரயில் தூத்துக்குடி – மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனுடைய இணை ரயில் வண்டி எண் 06236 மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில் மதுரை வரை இயக்கப்பட்டுள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று கொல்லத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06724 கொல்லம் – சென்னை அனந்தபுரி சிறப்பு ரயில் கொல்லம் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு இந்த ரயில் நாகர்கோவிலிலிருந்து இன்று இரவு 09.15 மணிக்கு புறப்படும். இதன் இணை ரயில் வண்டி எண் 06723 சென்னை – கொல்லம் அனந்தபுரி சிறப்பு ரயில் நாகர்கோவில் வரை இயக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வண்டி எண் 02638 மதுரை – சென்னை பாண்டியன் சிறப்பு ரயில் இன்று மதுரையில் இருந்து இரவு 09.20 மணிக்கு பதிலாக இரவு 10.20 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 02632 திருநெல்வேலி – சென்னை நெல்லை சிறப்பு ரயில் இன்று இரவு 07.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை அதிகாலை 01.45 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.
வண்டி எண் 02662 செங்கோட்டை – சென்னை பொதிகை சிறப்பு ரயில் செங்கோட்டையிலிருந்து இன்று மாலை 06.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.10 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 06106 திருச்செந்தூர் சென்னை செந்தூர் சிறப்பு ரயில் திருச்செந்தூரிலிருந்து இன்று மாலை 06.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இன்று இரவு 10.50 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 02694 தூத்துக்குடி – சென்னை முத்துநகர் சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து இன்று இரவு 08.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நாளை அதிகாலை 02.05 மணிக்கு புறப்படும்.
வண்டி எண் 02634 கன்னியாகுமரி – சென்னை சிறப்பு ரயில் கன்னியாகுமரியிலிருந்து இன்று மாலை 05.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 07.45 மணிக்கு புறப்படும்13. இன்று தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06065 தாம்பரம்-நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில், இன்று மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06729 மதுரை – புனலூர் சிறப்பு ரயில் மற்றும் நாகர்கோவிலில் இருந்து நாளை (01.4.2021) புறப்பட வேண்டிய வண்டி எண் 06066 நாகர்கோவில் – தாம்பரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
இன்று கோயம்புத்தூரில் இருந்து இரவு 07.30 மணிக்கு புறப்படும் வண்டி எண் 02667 கோயம்புத்தூர் நாகர்கோவில் சிறப்பு ரயில் மதுரை நாகர்கோவில் ரயில்வே நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. நாளை (01.4.2021) நாகர்கோவிலில் இருந்து இரவு 09.45 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 02667 நாகர்கோவில் – கோயம்புத்தூர் சிறப்பு ரயில் நாகர்கோவில் – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
தாமதமான ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு திருநெல்வேலி, வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, விருதுநகர், கள்ளிக்குடி, மதுரை, சமயநல்லூர், சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் உணவு மற்றும் குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தாமதமான ரயில்களில் பயணம் செய்யாத பயணிகளுக்கு முழு கட்டணத் தொகையும் திரும்ப அளிக்கப்பட்டது. முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்கள் தாமதமாக வரும் விவரங்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.
திருமங்கலம் – துலுக்கப்பட்டி இடையே அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வண்டி எண் 06321/06322 நாகர்கோயில் – கோயம்புத்தூர் – நாகர்கோயில் பகல்நேர சிறப்பு ரயில் 01.4.2021 முதல் 13.4.2021 வரை மதுரை – நாகர்கோயில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது