ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி நாகாச்சி பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தலை துண்டித்து நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்டவரின் உறவினர்கள் உச்சிப்புளி யூனியன் அலுவலகம் முன்பு சாலை மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது.
உச்சிப்புளி அருகே கல்கிணற்று வலசையை சேர்ந்தவர் ராமு என்பவரின் மகன் தேவா (26). இவருக்கும் உச்சிப்புளி அருகே நாகாச்சியை சேந்தவர் கணேசமூர்த்தி9 24) என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகாச்சி பகுதியில் கணேசமூர்த்தி உறவினர் ஒருவர் மது போதையில் தாக்கியதாகவும் அதை தட்டி கேட்க சென்ற போது கணேசமூர்த்தியை தேவா உள்ளிட்டோர் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த கணேசமூர்ததி சமீபத்தில் வீடு திரும்பி உள்ளார்.
இதனால் தேவாவை பழிவாங்க முடிவு செய்த கணேசமூர்த்தி தனது நண்பர்களுடன் இணைந்து திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு தேவா தனது நண்பர் முத்துக்குமார் உடன் நடு வலசை பகுதியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது கணேசமூர்த்தி கார்த்திக் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்று உள்ளனர்.
இந்நிலையில் நம்பாயி வலசை அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென தேவாவை கணேசமூர்த்தி தரப்பினர் இடைமறித்து பயங்கர ஆயுதங்கள் கொண்டு விரட்டியுள்ளனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த தேவாவும் அவரது உறவினர் முத்துக்குமாரும் டூவிலரை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். உறவினர் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தேவா தப்பிக்க வழியின்றி புதருக்குள் மறைந்து கொண்டார். அவரை சுற்றி வளைத்த கணேசமூர்த்தி கோஷ்டியினர் வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாக வெட்டினர். பின்னர் அவரது தலையை மட்டும் துண்டித்து சென்று தாமரைக்குளம் பகுதியில் போட்டுவிட்டு சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த உச்சிப்புளி காவல்துறையினர் தேவாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தேவாவின் உறவினர் முத்துக்குமார் சாட்சியம் அளித்தார். அதன்பின்னர் தேவாவின் சகோதரர் மூர்த்தி அளித்த புகாரின் பேரில் கொலைச் சம்பவம் குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கணேசமூர்த்தி கார்த்திக் தினேஷ் உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வந்தநிலையில் கொலையாளிகள், நேற்று திருப்புவனம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என உச்சிபுளி யூனியன் அலுவலகம் முன்பு கொல்லப்பட்ட தேவாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.