தமிழகத்தில் நாளை மறுதினம் இரவு 7 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. அப்போது, தேர்தல் பிரசாரத்திற்காக வந்த வெளியூர் ஆட்களும் தொகுதிகளை விட்டு வெளியேறி விட வேண்டும்.
வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வீடு வீடாக கூட சென்று பிரசாரம் செய்யக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கொரோனா காலம் என்பதால் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 12 டி படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து தபால் வாக்கு அளிக்கும் விதமாக மொத்தம் 92 ஆயிரத்து 559 தபால் வாக்கிற்கான விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 30 ஆயிரத்து 894 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்களிக்க விண்ணப்பித்தவர்களிடம் இருந்து 5ம் தேதி வரை வாக்குகள் பெறப்படும்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு கூகுள்-பே மூலம் பணம் வழங்கியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரிக்கு புகார் வரவில்லை. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் கடைசி நேர பணப்பட்டுவாடா தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும், குறிப்பாக இரவு நேரம் சோதனையை இன்னும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி சேனல்கள் கேபிள்களில் இருந்து மாற்றம் செய்வது தொடர்பாக செய்தி மற்றும் விளம்பரத்துறையிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். நாளை மறுதினம் (4ம் தேதி) இரவு 7 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது.
அப்போது, தேர்தல் பிரசாரத்திற்காக வந்த வெளியூர் ஆட்களும் தொகுதிகளை விட்டு வெளியேறி விட வேண்டும். அதன்பிறகு வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வீடு வீடாக கூட சென்று பிரசாரம் செய்யக்கூடாது. பீகார் தேர்தலில் கொரோனா காலக்கட்டத்தில் தான் அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதேபோன்று தமிழகத்தில் தற்போது, கொரோனா தொற்று பரவல் இருந்தாலும் மக்கள் வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர். இதனால் அதிக வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் தேர்தலில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் என மொத்தம் 4 லட்சத்து 66 ஆயிரம் 884 தபால் வாக்குகள் உள்ளது. இதில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 519 விண்ணப்பங்கள் விநியோகிப்பட்டுள்ளது.
இதில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 350 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தினமாக மே 2ம் தேதி காலை 8 வரை தபால் வாக்குகளை நேரிலோ அல்லது தபால் மூலமோ அரசு ஊழியர்கள் அளிக்கலாம் என்றும்,
சென்னையில் அதிகளவில் 42 கோடியே 78 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. சேலத்தில் 42.78 கோடி பிடிபட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 27ம் தேதி முதல் நேற்று வரை தமிழகம் முழுவதும் பல்வேறு வழக்குகளில் 46 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ”வாக்காளர்கள் பாதுகாப்புடன் வாக்களிக்கும் வகையில், சுகாதாரத்துறை மூலம் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக முககவசம், கவச உடை மற்றும் வெப்பநிலை பரிசோதனை கருவிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய 54 கோடியே 12 லட்சம் சுகாதாரத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று சட்டமன்ற தேர்தல் செலவுக்காக மட்டும் தமிழக அரசு 700 கோடி ஒதுக்கியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை 1950 தொலைபேசி எண்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்.