சட்டசபை தேர்தல் முடிந்ததும், பிளஸ்2 பொதுத்தேர்வுக்கான ஆயத்தப்பணிகளை முடுக்கி விட கல்வித்துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.
பிளஸ்2 பொதுத்தேர்வு மே 3ல் துவங்குகிறது. இன்னும் ஒரு மாத கால அவகாசமே உள்ள நிலையில், தேர்தல் முடிந்ததும் செய்முறை பொதுத்தேர்வுக்கு, ஒருவார காலம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
இம்மதிப்பெண்களை, பள்ளி வாரியாக பெற்று தொகுக்க வேண்டும். இதற்கிடையில், விடைத்தாளுக்கு முகப்பு பக்கம் தைத்தல், தேர்வு மையங்கள் அமைத்தல், கண்காணிப்பு பணிகளில், ஆசிரியர்கள் நியமித்தல் என அடுத்தடுத்த தேர்வு சார்ந்த, ஆயத்தப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இது சார்ந்து, தேர்தல் முடிந்ததும், கூட்டம் நடத்தி, தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே பத்தாம் வகுப்புக்கு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண்ணே தெரியாமல், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவல் காரணமாக, பிளஸ் 1 வரை அனைத்து மாணவர்களுக்கும் பொது தேர்வோ, ஆண்டு தேர்வோ நடத்தப்படவில்லை; அனைவருக்கும், ஆல் பாஸ் அறிவிக்கப் பட்டது.
இந்நிலையில், 10ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, பிளஸ் 1 மாணவர் சேர்க்கையை, தனியார் பள்ளிகள் துவங்கி உள்ளன. பொது தேர்வு நடத்தாவிட்டாலும், பள்ளிகள் தனியாக சிறிய தேர்வு நடத்தி, மாணவர்களின் விருப்பங்களையும், கற்றல் திறன்களையும் அறிந்து வருகின்றனர்.
எந்த பாடத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்ற விபரம் கேட்கப்பட்டு, அதற்கேற்ற பாட பிரிவுகள் ஒதுக்கப்படுகின்றன.மதிப்பெண் ஆய்வுகடந்த கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது.
அப்போது, அவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வின் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
நடப்புக் கல்வி ஆண்டில், ஒரு தேர்வு கூட நடத்தவில்லை. எனவே, கடந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் படித்த, 9ம் வகுப்பு பருவத் தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணைக் கணக்கிட்டு, சான்றிதழ் வழங்கலாம் என, பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் யோசனை தெரிவித்து உள்ளனர்.