அமித் ஷா மகனின் சொத்துக்களை என் பெயரில் எழுதி வைக்கிறீங்களா? நான் என் சொத்தை எழுதித் தர்றேன் என சவால் விட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக.,வுக்காக பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி, ”இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஜெய்ஷா. அவர் நடத்தும் கம்பெனிகளுக்கு வரி கட்டவில்லை. குஜராத்தில் அமைச்சராக இருந்தபோது போலி என்கவுண்டர் வழக்கில் கம்பி எண்ணியவர்தான் இந்த அமித்ஷா. குஜராத் நீதிமன்றம் சொல்லி ஆறு மாதம் மாநிலத்துக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டு ஊரைவிட்டு ஓடியவர் தான் இந்த அமித்ஷா.
தைரியம் இருந்தால் சவாலுக்கு வாருங்கள். நான் என் பெயரில் உள்ள அத்தனை சொத்துக்களையும் உங்கள் பையன் பேரில் எழுதி வைக்கிறேன். உங்கள் மகன் பெயரில் உள்ள சொத்துக்கள் முழுவதையும் என் பேரில் எழுதி வையுங்கள்.
மோடி அவர்களே அமித்ஷா அவர்களே நாங்கள் உங்களைப் பார்த்து பயப்படுவதற்கும், கூழைக் கும்பிடு போடுவதற்கும் நாங்கள் ஒண்ணும் எடப்பாடியோ, ஓபிஎஸ்ஸோ கிடையாது. நான் யாரு? உதயநிதி ஸ்டாலின். கலைஞர் பேரன். உங்கள் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டேன். என் தங்கை செந்தாமரை வீட்டில் ஐடி ரெய்டு நடந்துள்ளது. நான் சவால் விடுகிறேன். நான் எனது வீட்டு முகவரி தருகிறேன். சித்தரஞ்சன் சாலை. தைரியமிருந்தால் என் வீட்டிற்கு வந்து பார்” என சவால் விட்டுள்ளார்.
அடுத்தவர் சொத்தை ஆட்டையப் போட்டே இன்று மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் குடும்பத்தினருக்காகக் கட்டிக் கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களை ஏகத்துக்கும் வளைத்துப் பிடித்து குடும்பச் சொத்தாக வைத்திருக்கும் கருணாநிதி குடும்பம், ஒரு காலத்தில் கள்ள ரயில் ஏறி சென்னை வந்து கஷ்டப் பட்டதாக பீற்றிக் கொண்டது. இன்று பஞ்சமி நிலத்தில் தான் கட்சி அலுவலகத்தையே வளைத்துப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதலில் ஆட்டையப் போட்ட நிலத்திற்கும் சொத்திற்கும் பதிலக் காணோம். பஞ்சமி நில மூலப்பத்திரம் குறித்து இதுவரை மூச்சு விடவில்லை. அப்பறம் உதாரு விடலாம் உதய்.. என்று நெட்டிசன்ஸ் டிவிட்டர் பதிவுகளில் வறுத்தெடுக்கிறார்கள்.