குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு இலவச தங்க மூக்குத்தி உட்பட பல்வேறு பரிசுகளை, அப்பகுதியைச் சேர்ந்த அமைப்பு அறிவித்துஉள்ளது.
குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.கடந்த சில நாட்களாக, கொரோனா தொற்று அதிகரித்து வரும், 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில், குஜராத்தும் இடம்பெற்றுள்ளது.
இம்மாநிலத்தின், சூரத், ராஜ்கோட், வதோதரா, ஆமதாபாத் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமெடுக்கத் துவங்கியிருப்பதை அடுத்து, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், கடந்த, 1ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.
குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள தடுப்பூசி முகாம் ஒன்றில், தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என, அப்பகுதியைச் சேர்ந்த தங்க நகை செய்வோர் அமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி, பெண்களுக்கு தங்க மூக்குத்தியும், ஆண்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக, இந்த பரிசு பொருட்கள் வழங்குவதாக, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.