மருத்துவர்களின் ஆலோசனையை மீறி தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் கார்த்திக்கிற்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான நடிகர் கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்னும் பெயரில் கட்சி நடத்தி வருகிறார். சட்டசபை தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை. எனினும் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக பிரசாரங்களில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
திடீரென உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பின் உடல்நலம் சற்று தேறிய கார்த்திக், போடி தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும், சூலூர் தொகுதி வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்து ஓட்டு கேட்டார்.
சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் ஞாயிற்று கிழமையுடன் முடிந்தநிலையில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சு திணறலால் நேற்று மாலை சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.