கட்சி சின்னம் பொறித்த சட்டையுடன் வந்து ஓட்டு போட்டு விட்டு, போட்டோ எடுத்து வெளியிட்ட திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி போட்டியிடுகிறார். இன்று, உதயநிதி , தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில், தனது தந்தை ஸ்டாலின், தாயார் துர்கா, மனைவியுடன் வந்து, வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.
அப்போது, உதயசூரியன் சின்னம் பொறித்த சட்டையை உதயநிதி அணிந்திருந்தார். இது தேர்தல் விதிகளை மீறிய செயல் எனக்கூறி உதயநிதி மீது அதிமுகவின் பாபு முருகவேல், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.
இதனிடையே, வாக்கு செலுத்த போகும் போது கட்சியின் சின்னம் பொறித்த படமோ கொடியோ இருக்க கூடாது என்பது விதி! கட்சிகளின் சின்னம் பொறித்த பூத் ஸ்லிப்பை கூட கிழித்து விட்டுதான் உள்ளே அனுமதிக்கப் படுவார்கள்.
அறிவாலய மூன்றாம் பேரரசர் கொடி பொறித்த சட்டையோடு வாக்கு செலுத்துகிறார் . தேர்தல் ஆணையம் தூங்கி கொண்டா இருக்கிறது? என்று சமூகத் தளங்களில் பலரும் தேர்தல் அலுவலர்கள், அதிகார்கள் மீது பாய்கிறார்கள். இதுவே, தேர்தல் அதிகாரிகள் திமுக.,வுக்கு ஆதரவாக பல இடங்களிலும் வேலை செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது என்று கூறுகின்றனர்.