விருகம்பாக்கம் தொகுதியில் வாக்களிக்க வந்த மூதாட்டி ஒருவர், 2 வாக்குச்சாவடிகளுக்கு இடையே அலைக்கழிக்கப்பட்டார். ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தலையீட்டால் நீண்ட நேரத்துக்கு பிறகு அவர் வாக்களித்தார்.
சென்னை விருகம்பாக்கம் காவேரி தெருவில் வசித்து வருபவர் இசக்கி பாண்டியன். இவரது தாய் செல்லம்மாள்(85). சாலிகிராமம் காவேரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு நேற்று காலை 7.30 மணியளவில் செல்லம்மாளுடன் இசக்கி பாண்டியன் வந்தார்.
இவர்களது வாக்காளர் அடையாள அட்டையை பார்த்த அதிகாரிகள், அருகில் உள்ள கிளாரன்ஸ் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு செல்லும்படி கூறினர். அங்கு சென்றபோது, காவேரி பள்ளி வாக்குச்சாவடியில்தான் வாக்களிக்க வேண்டும் என்று அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.
காவேரி பள்ளியில் இருந்து அவர் மீண்டும் கிளாரன்ஸ் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அப்போது, அங்கு வாக்களிக்க வந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் மூதாட்டியின் மகன் நடந்த விஷயங்களை எடுத்துரைத்தார். இதையடுத்து, மூதாட்டிக்கு உதவும்படி அதிகாரிகளை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து, நீண்ட நேரத்துக்கு பிறகு மூதாட்டி செல்லம்மாள் கிளாரன்ஸ் பள்ளியில் வாக்களித்தார்.
இது தொடர்பாக, மூதாட்டியின் மகன் இசக்கி பாண்டியனிடம் கேட்டபோது, ‘2 வாக்குசாவடி மையங்களுக்கும் வயதானவர் என்று கூட பார்க்காமல் என்னுடையதாயை அதிகாரிகள் அலைக்கழித்தனர். 2 மணி நேரத்துக்கு மேலாக அலைந்த பிறகு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் முறையிட்டோம். அவர் கூறிய பிறகுதான் கிளாரன்ஸ் பள்ளியில் வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர்” என்றார்.