கொரோனா முதல் அலையின் போது தொற்று பரவல் அதிகரித்த வேளையில் கோவில்களை மூடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இந்த முறை திருப்பதியில் இலவச டிக்கெட் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலையின் போது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் திருப்பதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பின்னர் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.
அதன் காரணமாக திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் கூட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் சற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதியிலிருந்து இலவச தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துவருவதால், வரும் திங்கள்கிழமை முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11 ஆம் தேதி இரவுடன் இலவச தரிசனம் முடிவடையும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது. மேலும் நாளொன்றுக்கு 300 ரூபாய் டிக்கெட் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. முதல் அலையின் போதும் வெகுவாக பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா இப்போதும் அதே அளவுக்கு பாதிக்கப்படுகிறது. நாட்டின் மொத்த பாதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மகாராஷ்டிராவில் பாதிக்கப்படுகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிராவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சீரடி சாய்பாபா கோவிலிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அம்மாநிலத்தில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் மூடப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.