திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுக சார்பில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள துரைமுருகன், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார் துரைமுருகன். ஏற்கனவே, திமுக வேட்பாளர்களுக்கு வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி. கனிமொழிக்கு, தேர்தலுக்கு முன்பாகவே கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஒரு சில அரசியல் தலைவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.