ஜனகாம மாவட்டத்திலுள்ள பெம்பர்த்தி அருகே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக பூமியை தோண்டியபோது 5 கிலோ தங்க புதையல் வெளிப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஜனகாமா மாவட்டத்திலுள்ள பெம்பர்த்தி கிராமம் அருகே இரண்டு ஏக்கர் நிலத்தை நரசிம்ஹா என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்வதற்காக வாங்கியிருந்தார்.
இந்த நிலையில் இன்று அந்த இடத்தில் பூமி பூஜை நடத்தி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பூமி தோண்டப்பட்டது.
அப்போது செம்பு குடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் ஐந்து கிலோ எடையுடைய தங்க ஆபரணங்கள் புதையலாக வெளிப்பட்டன.
இதுபற்றி ரியல் எஸ்டேட் அதிபர் நரசிம்ஹா அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் ஆகியோர் புதையலாக கிடைத்த 5 கிலோ எடை உள்ள பல்வேறு வகையான தங்க ஆபரணங்களை கைப்பற்றி கருவூலத்திற்கு எடுத்து சென்றனர்.
காகதீய ராஜாக்கள் ஆட்சி காலத்தின் போது பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் தற்போது புதையலாக வெளிப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த பகுதியில் மேலும் இது போன்ற புதையல் இருக்கலாம் என்று கருதிய அதிகாரிகள் ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளனர்.