திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் 13,800 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் சிலருக்கு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல் தேர்தல் பணியை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், வாக்குப் பதிவு முடிந்ததும் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள், கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அவர்களில், 15-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் சிலர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு சிலர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால், திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் உட்படசில அலுவலகங்களில் பணி செய்ய அவர்கள் நேற்று வரவில்லை. இதனால், அலுவலகங்களில் ஊழியர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
இது குறித்து வருவாய்த் துறைஉயர் அதிகாரிகள் கூறும்போது, ‘தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி வந்தோம். அவர்களில் பலர் போட்டுக் கொண்டுள்ளனர்.
இருப்பினும், தொடர் பணி காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பதாக தெரியவருகிறது. காய்ச்சல் இருப்பவர்களை, நாங்கள் தொடர்ந்து பணி செய்ய அனுமதிக்கவில்லை’ என்றனர்