.
கேரளத்தில் வங்கி மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் மாவட்டம், குத்துப்பரம்பா பகுதியில் உள்ள தோக்கிலங்காடி கனரா வங்கியின் கிளை மேலாளாராக பணிபுரிந்து வந்தவர் கே. ஸ்வப்னா(38). இவர் இன்று வங்கியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
காலை 9 மணிக்கு வேலைக்கு வந்த பெண் ஊழியர் ஒருவர், மேலாளர் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உடன் பணியாற்றியவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஸ்வப்னாவை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும் அவர்களால் ஸ்வப்னாவை காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குத்துப்பரம்பா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் ஸ்வப்னா எழுதிய டைரியைக் கைப்பற்றினர். அதில் அவர் வேலை அழுத்தத்தைத் தாங்க முடியாமல் இந்த நடவடிக்கை எடுப்பதாக எழுதப்பட்டிருந்தது
இறந்த ஸ்வப்னாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் 2020ஆம் ஆண்டு குத்துப்பரம்பா பகுதியில் உள்ள கனரா வங்கி கிளையில் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணூரில் உள்ள நிர்மலகிரியில் இரண்டு குழந்தைகள் உட்பட தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். திர்சூர் மாவட்டத்தில் மன்னூட்டியைச் சேர்ந்தவர் ஸ்வப்னா.