ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன் 62. இவர் விசைத்தறி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு 1 கோடி ரூபாய் கடன் இருந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காலில் காயமடைந்துள்ளார்.
இதற்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரது மனைவி ஜோதிமணி(55), உறவினர் ராஜா(41) இருவரும் சேர்ந்து நேற்று இவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ஆம்னி வேனில் அழைத்து வந்தனர்.
இவர்கள் பெருமாநல்லூர் அருகே பொரசுபாளையம் பிரிவு பகுதியில் வந்த போது காரில் இருந்து புகை வந்ததாக கூறி இறங்கி உள்ளனர்.
ரங்கராஜனுக்கு காலில் அடிப்பட்டு இருந்தால் அவரை மீட்பதற்குள் கார் முழுமையாக தீ பிடித்து எரிந்து விட்டதாகவும் இதில் ரங்கராஜன் உடல் கருகி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் விசாரணையில் ஜோதிமணியும், ராஜாவும் முன்னுக்குப்பின் முரணாக வேறுவேறு மாதிரி பேசியுள்ளனர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
இதனால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தது. ரங்கராஜனுக்கு 1 கோடி ரூபாய் கடன் இருந்துள்ளது. மேலும் ரங்கராஜன் 3 கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு எடுத்திருந்ததும் அதில் நாமினியாக ஜோதிமணியை நியமித்திருந்ததும் தெரியவந்தது.
கடன் தொல்லை இவ்வளவு உள்ள நிலையில் தன்னை கொன்று விடுங்கள் என ரங்கராஜன் கூறியதாகவும் இதனால் கடன் பிரச்சனையில் இருந்து மீளவும் மற்றும் அவர் 3 கோடி ரூபாய்க்கு செய்திருந்த விபத்து காப்பீட்டு தொகையை பெறவும் காருடன் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக் கொண்டனர்.
இதை மறைப்பதற்காக கார் தானாகவே தீப்பிடித்து எரிந்ததாக நாடகமாடியதையும் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து ரங்கராஜின் மகன் நந்தகுமார் அளித்த புகாரின் பேரில் ஜோதிமணியையும் அவருக்கு உதவியாக செயல்பட்ட உறவினர் ராஜா என்பவரையும் பெருமாநல்லூர் போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கடன் தொல்லை மற்றும் இன்சூரன்ஸ் பாலிசிக்காக பெட்ரோல் ஊற்றி காருடன் கணவரை மனைவி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.