சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி (46). கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்.
வடபழனி மாநகர போக்குவரத்து பணிமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தவர் முத்து (48). இவர் அவ்வப்போது, கோயம்பேடுக்கு வரும்போது, சாந்தியுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள 4வது பிளாட்பார்மில் சாந்தி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். அப்போது பெட்ரோல் கேனுடன் முத்து வந்தார். திடீரென, சாந்தி மீது பெட்ரோலை ஊற்றி விட்டு, தன் மீதும் முத்து ஊற்றி கொண்டார். பின்னர் தீக்குச்சியை உரசி, சாந்தி மீது போட்டு விட்டு, தன் மீதும் தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதில் இருவரும் அலறி துடித்தனர்.
சத்தம் கேட்டு அப்பகுதியில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மற்றும் கடை வியாபாரிகள் அலறியடித்து எழுந்தனர். சிலர் அங்கும் இங்குமாக ஓடினர்.
தகவலறிந்து கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இருவரது உடலிலும் பரவியிருந்த தீயை, சுமார் 2 மணி நேரம் போராடி போலீசார் அணைத்தனர்.
பின்னர், இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இச்சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், ‘கடந்த சில ஆண்டுகளாக முத்துவுக்கும் சாந்திக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வேறு ஒருவருடன் சாந்திக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் முத்துக்கு தெரியவந்தது. இதை சாந்தியிடம் கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த ஆத்திரத்தில் இன்று அதிகாலை சாந்தியை தீ வைத்து எரித்துவிட்டு முத்துவும் தற்கொலை செய்து கொண்டார்’ என்பது தெரியவந்தது.
மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தினால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.