விதியை மீறி கூடுதல் பயணிகளை அனுமதி செய்து பேருந்து இயக்கப்பட்டால், அந்த பேருந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மேலும், கடுமையான ஊரடங்கையும் அமல்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மத்திய பேருந்து நிலையத்தில் கொரோனா விதிகள் கடைபிடிக்கப்படுகிறதா? என கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ” கூடுதல் பயணிகளை அனுமதிக்கும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு ரூபாய் 500 முதல் 1000 வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், சம்பந்தப்பட்ட பேருந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும். கூடுதல் பயணிகளை பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் எக்காரணம் கொண்டும் அனுமதி செய்யக்கூடாது.
கொரோனா விதிமுறைகளை ஒவ்வொருவரும் முறையாக கடைபிடிக்க வேண்டும் :” என்று தெரிவித்தார்.