செல்போனில் வந்த கொரோனா தகவலால் அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர், பதற்றத்தில் காரை மின்கம்பத்தில் மோதவிட்ட துயர சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
கேரளா கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட கடக்கல் பகுதியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் கடந்த திங்கள் கிழமை காலை, தனது இரு குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு, கொல்லத்தில் உள்ள தனியார் ஆய்வு கூடத்திற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்றுள்ளார்.
அங்கு ரத்தம் மற்றும் சளி மாதிரியை கொடுத்திவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
ஆனால் அவர் காரில் புறப்பட்டு சிறிது தூரம் வந்ததும், அவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக கூறி செல்போனில் குறுந்தகவல் வந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ந்த அந்தப்பெண், செய்வதறியாது பதற்றமடைந்துள்ளார்.
ஏற்கனவே கார் ஓட்டியபடியே இருந்த அவர், கவனம் சிதறியதும் நேராக முன்னால் இருந்த மின் கம்பம் மீது வேகமாக மோதியுள்ளார். இதில் அவரது கார் கம்பத்தில் மோதி தலைக்கீழாக கவிழ்ந்தது.
ஆனால் அவர் முகத்தில் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இந்த சம்பவத்தை பார்த்த அவ்வழியே சென்றவர்களும் உதவ முன்வரவில்லை. மேலும் உதவ வந்தவர்களும் பெண்ணுக்கு கொரோனா இருப்பது தெரிந்ததும் பின்வாங்கியுள்ளனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் பெண் அங்கேயே காயங்களுடன் இருந்தார்.
வெகு தாமத்திற்கு பின் வந்த தீயணைப்பு துறையினர், பெண்ணிற்கு கொரோனா பாதுகாப்பு கவச உடையை வழங்கியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து வந்த அவரது உறவு பெண், பெண்ணை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்