சாப்பிடும்போது மாஸ்க் இல்லை என்று அபராதம் விதித்துள்ளனர் சுகாதாரத் துறை அதிகாரிகள்.
அரியலூர் மாவட்டம் ரெட்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மனைவி அலமேலு. 40 வயதாகும் இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். \
இந்நிலையில் அவர் தான் அணிந்திருந்த முக கவசத்தை கழற்றிவிட்டு சாப்பிட்டு முடித்து கை கழுவச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வருவாய்த் துறையினர் அலமேலு முகக்கவசம் அணிய வில்லை என்று கூறி 200 ரூபாய் அபராதம் விதித்தனர்
இதேபோல் அப்பகுதியில் வியாபாரிகள் சிலர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்த போதும் அவர்களிடமும் அபராதம் வசூல் செய்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவாய்த் துறையினரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அந்தப் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு முக்கியம் என்றும் வீட்டில் இருக்கும் போதும் முக கவசம் அணியவில்லை என்பதற்காக அடுத்த முறை அங்கு வந்து அபராதம் விதித்து வசூல் செய்தாலும் செய்வார்கள் அதிகாரிகள் என்றும் சமூகத் தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன!