ஆவடி அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த போதகரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை ஆவடி அடுத்த மோரை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்காட் டேவிட் (53). இவர் அதே பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் போதகராக உள்ளார்.
இவருக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ஆரிக்கம்பேடு, சாலோம் நகரைச் சார்ந்த 48 வயது பெண் ஒருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, அந்த பெண் தனது குடும்ப கஷ்டங்களை டேவிட்டிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, அவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்து வந்துள்ளார் டேவிட். மேலும், அந்த பெண்ணிடம், “எங்களது சர்ச்சுக்கு வந்து பிரார்த்தனை செய்தால் உங்கள் கஷ்டம் தீரும்” எனக் கூறி உள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கிறிஸ்துவ ஆலயத்திற்குத் தனியாகச் சென்று உள்ளார். அங்கு, அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, ஸ்காட் டேவிட், அவரை பின்னால் வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் சத்தம் போட்டு அலறியடித்து அங்கிருந்து வெளியே ஓடி வந்துள்ளார்.
மேலும், இது குறித்துப் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கிறிஸ்தவ போதகர் ஸ்காட் டேவிட்டை கைது செய்தனர்.
மேலும், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.