spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?இன்னொரு பொது முடக்கம் தேவையில்லை; அது உங்கள் கையில்: பிரதமர் மோடி உரை!

இன்னொரு பொது முடக்கம் தேவையில்லை; அது உங்கள் கையில்: பிரதமர் மோடி உரை!

- Advertisement -
modi speech
modi speech

என் அன்பான நாட்டு மக்களே, வணக்கம்

இன்று நாடு கொரோனாவுக்கு எதிராக மீண்டும்மிகப் பெரிய போரில் ஈடுபட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வரை நிலைமை சமாளிக்கப்பட்டு வந்தது. பின்னர் கொரோனாவின் இரண்டாவது அலைவந் துள்ளது. நீங்கள் அனுபவித்த வேதனையையும், நீங்கள் அனுபவிக்கும் வலியையும் நான் முழுமையாக அறிவேன்.

கடந்த காலங்களில் உயிர் இழந்தவர்களுக்குஅனைத்து நாட்டு மக்களின் சார்பிலும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு குடும்ப உறுப்பினராக, உங்கள் வருத்தத்தில் நானும் பங்கு கொள்கிறேன். சவால் பெரியது, ஆனால் அதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நம்முடைய உறுதி, தைரியம், தயார் நிலை ஆகியவற்றொடு வெல்ல வேண்டும்.

நண்பர்களே… நான் சொல்ல வந்ததை விரிவாகக் கூறுவதற்கு முன்பு, அனைத்து மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், எங்கள் தூய்மைப் பணி செய்கின்ற உடன்பிறப்புகள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்,  பாதுகாப்பு-போலீஸ்காரர்கள் அனைவரையும் பாராட்ட விரும்புகிறேன்.

கொரோனாவின் முதல் அலையின் போது உங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களையும் காப்பாற்றினீர்கள். இன்று நீங்கள் மீண்டும் இந்த நெருக்கடியில் இரவும் பகலும் பணியில் சோர்வின்றி ஈடுபட்டுள்ளீர்கள். உங்கள் குடும்பத்தையும், உங்கள் மகிழ்ச்சியையும், உங்கள் கவலைகளையும் விட்டுவிட்டு, மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுகிறீர்கள்.

நண்பர்களே… இது நம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது –த்யாஜ்யம் ந தைர்யம்,விதுரே அபிகாலே – அதாவது, மிகக் கடுமையான காலங்களில் கூட நாம் தைரியத்தை இழக்கக் கூடாது. எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க, நாம் சரியான முடிவை எடுக்க வேண்டும்; சரியான திசையில் முயற்சி செய்ய வேண்டும்; அப்போதுதான் நாம் வெற்றியை அடைய முடியும்.

இந்த மந்திரத்தை முன்னால் வைத்து, இன்று நாடு இரவும் பகலும் உழைத்து வருகிறது. கடந்த சில நாட்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலைமையை விரைவாக மேம்படுத்தும்.

கொரோனா நெருக்கடியில் நாட்டின் பல பகுதிகளிலும் இந்த முறை ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் விரைவாகவும் முழு உணர்திறனுடனும் வேலைகள் நடந்து வருகின்றன. மத்திய அரசு, மாநில அரசுகள், தனியார் துறை, அனைவருமே தேவைப்படும் ஒவ்வொரு நபருக்கும் ஆக்ஸிஜனை வழங்க தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள்.

ஆக்ஸிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க பல மட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மாநிலங் களில் புதிய ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கவும், ஒரு லட்சம் புதிய சிலிண்டர்கள் வழங்கப்படவும், தொழில்துறை பிரிவுகளில் பயன் படுத்தப்படும் ஆக்ஸிஜன் மருத்துவ பயன்பாட்டிற்குப் பயன்படுத்தவும், ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல ஆக்சிஜன் ரயில், இது போன்ற ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நண்பர்களே … இந்த முறை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், நாட்டின் மருந்தியல் துறை மருந்துகளின் உற்பத்தியை அதிகரித்துள்ளது. இன்று, ஜனவரி-பிப்ரவரி மாதங்களை விட பல மடங்கு அதிகமான மருந்துகள் நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது இன்னும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று கூட, நமது நாட்டின் மருந்தியல் துறையின் முன்னணி நபர்களுடன், நிபுணர்களுடன் ஒரு நீண்ட பேச்சு நடத்தப்பட்டது. உற்பத்தியை அதிகரிக்க, மருந்து நிறுவனங்களின் உதவி ஒவ்வொரு வகையிலும் பெறப்படுகிறது. மிகச் சிறந்த மற்றும் வேகமான மருந்துகளை தயாரிக்கும் ஒரு வலுவான மருந்துத் துறை நம் நாட்டில் இருப்பது நமது அதிர்ஷ்டம். இதனுடன், மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. சில நகரங்களில் அதிக தேவை இருப்பதைக் கருத்தில் கொண்டு, சிறப்பு மற்றும் பெரிய கோவிட் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன.

நண்பர்களே… கடந்த ஆண்டு, ஒரு சில கொரோனா நோயாளிகள் மட்டுமே நாட்டில் தோன்றியபோது, ​​ஒரே நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான பயனுள்ள தடுப்பூசிகள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. நமது விஞ்ஞானிகள் பகலிரவு பாராமல் உழைத்து, மிகக் குறுகிய காலத்தில் நாட்டு மக்களுக்கு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளனர்.

இன்று, உலகின் மலிவான தடுப்பூசி இந்தியாவில் உள்ளது. இந்தியாவின் நாம் தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைக்கும் குளிர்பதன முறைக்கு ஏற்ற வகையில் தடுப்பூசி நம்மிடம் உள்ளது. இந்த முயற்சியில், நமது தனியார் துறை புதுமை மற்றும் நிறுவன உணர்வை நிரூபித்துள்ளது.

தடுப்பூசிகளுக்கான ஒப்புதல்கள் மற்றும் ஒழுங்குமுறை செயல் முறைகளை விரைவான பாதையில் வைத்திருப்பதோடு, அனைத்து அறிவியல் மற்றும் ஒழுங்குமுறை ஆதரவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேட் இன் இந்தியா தடுப்பூசிகளைக் கொண்டு உலகின் மிகப் பெரிய தடுப்பூசி பிரச்சாரத்தை தொடங்க நமது இந்தியாவுக்கு உதவிய குழு முயற்சி இது. தடுப்பூசி போடுவதன் முதல் கட்டத்தில் இருந்தே நாம் வேகத்துடன், தடுப்பூசிகளை முடிந்தவரை பலருக்கு தேவைப்படும் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.  

இந்தியாவின் அதிவேக 10 மில்லியன், பின்னர் 11 மில்லியன் மற்றும் இப்போது 12 மில்லியன் தடுப்பூசி போடுதல் உலகிலேயே நம் நாட்டில்தான் மிக வேகமாக வழங்கப்பட்டுள்ளன. இன்று, கொரோனாவுடனான இந்த போரில், நம் சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி கொரோனா வீரர்கள், மூத்த குடிமக்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசியால் பயன் அடைந்துள்ளனர்.

நண்பர்களே… தடுப்பூசி தொடர்பாக மற்றொரு முக்கியமான முடிவையும் நேற்று எடுத்துள்ளோம். மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடலாம். இப்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசியில் பாதி நேரடியாக மாநிலங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும்.

இதற்கிடையில், ஏழை, முதியவர்கள், குறைந்த வர்க்க மக்கள் மற்றும் நடுத்தர வயது மற்றும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசி வழங்கும் திட்டம் வேகமாகத் தொடரும். முன்பு போலவே, அரசு மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசிகள் தொடர்ந்து கிடைக்கும். நான் சொன்னது போல், நமது ஏழைக் குடும்பங்கள், கீழ் வர்க்கம், நடுத்தர வர்க்க குடும்பங்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

நண்பர்களே … நம் அனைவரின் முயற்சியும் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு குறைந்த அளவு பாதிப்பு ஏற்படுவதற்கான முயற்சியாகவும் இருக்க வேண்டும்.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதைத் தொடங்குவதன் மூலம், நகரங்களில் உள்ள நமது பணியாளர்களுக்கு தடுப்பூசி வேகமாகக் கிடைக்கும். மாநில, மத்திய அரசுகளின் முயற்சியால், தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகள் வேகமாக கிடைக்கும்.

மாநில நிர்வாகத்திடம் எனது வேண்டுகோள் என்னவென்றால், தொழிலாளர்களின் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருங்கள். தொழிலாளர்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மாநிலங்கள் இந்த நம்பிக்கையை, அதாவது அவர்கள் இருக்கும் இடத்திலேயே அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடப்படும் என்பதற்கும், அவர்களின் பணிகள் நிறுத்தப்படாது என்பதற்கும் அவர்களுக்கு நம்பிக்கை தர வேண்டும்.

நண்பர்களே … கடந்த சமயத்தில் இருந்த சூழ்நிலைகள் தற்போதைய சூழ்நிலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அப்போது இந்த உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராட கொரோனாவுக்கான குறிப்பிட்ட மருத்துவ உள்கட்டமைப்பு நம்மிடம் இல்லை. நான் உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். நாட்டின் நிலைமை என்னவாக இருந்தது? கொரோனா சோதனைக்கு போதுமான ஆய்வகம் இல்லை; கவச உடைகளின் உற்பத்தி இல்லை; இந்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான எந்தவொரு குறிப்பிட்ட தகவலும் நம்மிடம் இல்லை.

ஆனால் மிகக் குறுகிய காலத்தில் இந்த விஷயங்களை நாம் மேம்படுத்தி யுள்ளோம். இன்று நம் மருத்துவர்கள் கொரோனா சிகிச்சையில் உயர்நிலையை அடைந்துள்ளனர், அவர்கள் மேலும் மேலும் உயிர்களை காப்பாற்றுகிறார்கள். இன்று நம்மிடம் ஒரு பெரிய அளவு பிபிஇ கருவிகள், ஒரு பெரிய ஆய்வக நெட்வொர்க் உள்ளது, நாம் தொடர்ந்து சோதனை வசதியை அதிகரித்து வருகிறோம்.

நண்பர்களே … கொரோனாவுக்கு எதிராக நாடு இதுவரை மிகவும் வலுவாகவும் பொறுமையாகவும் போராடியது. இதன் பெருமை உங்கள் அனைவருக்கும் செல்கிறது. ஒழுக்கத்துடனும் பொறுமையுடனும் கொரோனாவை எதிர்த்துப் போராடும் போது நாட்டை இன்றுள்ள நிலைக்குகொண்டு வந்திருக்கிறீர்கள்.

பொதுமக்களின் பங்களிப்பு சக்தியுடன், கொரோனாவின் இந்தப் புயலையும் தோற்கடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். ஏழைகளுக்கு உதவி வழங்க எத்தனை பேர், பல சமூக அமைப்புகள் இரவும் பகலும் உழைத்து வருகின்றன என்பதை இன்று நாம் சுற்றிலும் காண்கிறோம்.

மருந்துகளை வழங்க வேண்டுமா? சாப்பாடு வழங்க வேண்டுமா? அல்லது வாழ்க்கை ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமா? மக்கள் முழு ஆர்வத்துடன் செயல்படுகிறார்கள். இந்த மக்கள் அனைவரின் சேவைக்கும் நான் தலைவணங்குகிறேன்!

இந்த நெருக்கடி நேரத்தில் இன்னும் அதிகமான மக்கள் முன்வந்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

சமுதாயத்தின் முயற்சி மற்றும் சேவை செய்ய வேண்டும் என்கிற முழு மனதுடன் பணி செய்வதால் மட்டுமே இந்தப் போரில் நாம் வெற்றி பெற முடியும்.

என் இளம் சகாக்களைஅவர்களின் சமூகத்தில் ஒழுக்கத்தை ஏற்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சமூகத்தில், குடியிருப்பில் சிறுசிறு குழுக்களை உருவாக்குவதன் மூலம் கொரொனா பரவலைத் தடுக்கும் செயல்களில் அரசுக்கு உதவ வேண்டும். நீங்கள் இதைச் செய்தால், அரசாங்கங்கள் ஒருபோதும் கொரொனா தடுப்புப் பகுதிகளை உருவாக்கத் தேவையில்லை. அல்லது ஊரடங்கினை அதிகரிக்கவோ, பொது முடக்கம் பற்றிய கேள்வியோ எழாது.

நாட்டைத் தூய்மைப் படுத்தத் தொடங்கிய இயக்கத்தின் போது, நாட்டின் குழந்தை நண்பர்கள் நாட்டில் விழிப்புணர்வைப் பரப்புவதற்கு நிறைய உதவினார்கள். 5, 7, 10 ஆம் வகுப்புகளில் படிக்கும் சிறு குழந்தைகள். அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அது பற்றி விளக்கினார்கள், அவர்கள் பெரியவர்களுக்கு தூய்மை பற்றிய செய்தியையும் கொடுத்தனர்.

இன்று நான் என் குழந்தை நண்பர்களிடம் ஒரு விஷயத்தை குறிப்பாக சொல்ல விரும்புகிறேன். என் குழந்தை நண்பகளே, வேலை இல்லாதவர்கள், காரணமின்றி, வீட்டை விட்டு வெளியேறாத ஒரு சூழ்நிலையை வீட்டில் உருவாக்குங்கள். உங்கள் பிடிவாதம் மிகப் பெரிய முடிவுகளைத் தரும். இத்தகைய நெருக்கடியான நேரத்தில், மக்களை எச்சரிக்கையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கச் செய்ய ஊடகங்கள் முயற்சிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பது எனது பிரார்த்தனை. மேலும், அச்சத்தின் சூழ்நிலை குறைத்து, மக்கள் வதந்திகளிலும் குழப்பத்திலும் சிக்கக் கூடாது என்பதற்காக வேலை செய்யுங்கள்.

நண்பர்களே… இன்றைய சூழ்நிலையில், நாட்டை பொது முடக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். கடைசி விருப்பமாக பொது முடக்கத்தைப் பயன்படுத்த மாநிலங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

பொது முடக்கத்தைத் தவிர்க்க கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். மேலும் சிறு, சிறு கொரொனா தடுப்புப் பகுதிகள் அமைப்பதில் கவனம்செலுத்தவேண்டும். நமது பொருளா தாரத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவோம், நமது நாட்டு மக்களின் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொள்வோம்.

நண்பர்களே… இன்று வசந்த நவராத்திரியின் கடைசி நாள். நாளை ராம நவமி, மரியாதா புருஷோத்தம் ஸ்ரீ ராமின் செய்தி என்னவெனில் நாம் அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

கொரோனாவின் இந்த நெருக்கடியில், கொரோனாவை 100 சதவிகிதம் தவிர்க்க நீங்கள் ஒரு மந்திரத்தை நினைவில் வைக்க வேண்டும். அது என்னவென்றால் “மருந்தும் தடுப்பு நடவடிக்கையும்” இந்த மந்திரத்தை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

இந்த மந்திரம் தடுப்பூசிக்குப் பிறகு அவசியம். இன்று புனித ரமழான் மாதத்தின் ஏழாம் நாள். ரமலான் பொறுமை, சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை நமக்குக் கற்பிக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற ஒழுக்கமும் தேவை. தேவைப்படும்போது மட்டுமே வீட்டை விட்டு வெளியேறுங்கள்; கோவிட் ஒழுக்கத்தை முழுமையாகப் பின்பற்றுங்கள்.

உங்கள் அனைவருக்கும் என்னுடைய வேண்டுகோள்- உங்கள் தைரியம், பொறுமை மற்றும் ஒழுக்கத்துடன் இணைவதன் மூலம், இன்றைய சூழ்நிலைகளை மாற்ற நாடு எந்தவிதமான முயற்சியையும் விட்டுவிடாது என்று நான் மீண்டும் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

நீங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும், உங்கள் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், இந்த விருப்பத்துடன் எனது பேச்சை முடிக்கிறேன். மிக்க நன்றி !

  • தமிழில்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe