தனது தந்தை தன்னை அடித்து விடுவார் என்ற பயத்தில் சிறுவன் எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆறுமுகம், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள மூக்கனூர் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இவரது 14 வயது மகன் மணிகண்டன், தேவபாண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
தற்போது உள்ள கொரோனா கட்டுப்பாட்டால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு அவருக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. இதனால், ஆன்லைனில் படிப்பதற்காக அவரது தந்தை மணிகண்டனுக்கு புதிதாக ஒரு செல்ஃபோன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று ஆசிரியர் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் பாடத்தை நடத்திய போது, அவர் வீட்டுக்கு வெளியே வாசலில் செல் போனுடன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், படித்து கொண்டிருந்த மாணவன் வைத்திருந்த செல்ஃபோனை பறித்துக்கொண்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டனர். இதனால், செல்ஃபோனை பறித்துச் சென்றது கண்டு பதறித் துடித்து அழுதுள்ளார்.
இதனால் மனம் உடைந்து போன மணிகண்டன், செல்ஃபோன் திருட்டு போன தகவல் தனது தந்தைக்குத் தெரிந்தால் திட்டுவார் எனப் பயந்து, யாருக்கும் தெரியாமல் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து யாரும் கவனிக்காத நேரத்தில் தனது உடம்பில் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதைக்கண்ட அதிர்ச்சியில் உறைந்து போன அவரது குடும்பத்தினர், மணிகண்டனை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்ஃபோனை பறித்துச் சென்ற மர்ம மனிதர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.