கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரித்யன் கிரிதரன். அயனாவரத்தை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர்கள் 2 பேரும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுக்க போனார்கள்.
அங்கே, அந்த நிறுவன ஊழியர் பால்ஜோசப் என்பவர் மூலம் 2 பேரும் தலா ரூ.52 ஆயிரத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்தார்கள். அப்போது எங்கள் நிறுவனத்தில், கஸ்டமர்கள் கட்டிய பாலிசி பணத்திற்கு ஏற்ப கடன் வழங்கப்படும் என்று பால்ஜோசப் சொல்லி உள்ளார்.
இதனால், நேற்று முன்தினம் அதே இன்சூரன்ஸ் ஆபீசுக்கு ஸ்வேதாவும், கிரிதரனும் மறுபடியும் சென்று, தங்கள் இருவருக்கும் கடன் வழங்க வேண்டும் என்று பால் ஜோசப்பிடம் கேட்டனர்.
அதற்கு அவர், பாலிசி எடுத்து 2 மாசத்தில் கடன் தர முடியாது, அது விதி இல்லை என்று சொல்லி உள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த ஸ்வேதா, தாங்கள் கட்டிய பாலிசி பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டார்.. அதற்கு பால் ஜோசப், பாலிசி பணம் கட்டியாகிவிட்டது, அந்த பணத்தை உடனே தர முடியாது என்றார்.
இதனால், ஆவேசம் அடைந்த ஸ்வேதாவும், கிரிதரனும், “நாங்கள் இருவரும் போலீஸ் அதிகாரிகள், உங்களை விசாரிக்க வேண்டும்” என்று சொல்லி, பால்ஜோசப்பை அடித்து உதைத்துள்ளனர். நண்பர்களுடன் சேர்ந்து காரில் வைத்து கடத்தியும் உள்ளனர்.
அதுமட்டுமல்ல, இன்சூரன்ஸ் நிறுவன மேனேஜருக்கு போன் செய்து, நாங்க கட்டிய பாலிசி பணத்தை உடனடியாக பேங்க் அக்கவுண்ட்டில் போட்டால்தான், உங்கள் ஊழியரை ஒப்படைப்போம், அப்படி நீங்கள் பணம் தராவிட்டால், உங்கள் மனைவியை விபச்சார வழக்கில் உள்ளே தள்ளுவோம் என்று மிரட்டி உள்ளனர்.
இதை கேட்டு பதறி போன அந்த நிறுவன மேனேஜர் பிரனவ் என்பவர், அவர்கள் கேட்ட பாலிசி பணத்தை ஸ்வேதா, கிரிதரன் அக்கவுண்ட்டிற்கு அனுப்பி வைத்தார்.
ஆனாலும் பால் ஜோசப்பை அவர்கள் விடுவிக்கவில்லை.. ஒரு குடோனில் அடைத்து வைத்துள்ளனர். சித்ரவதை செய்துள்ளனர். ரூ.1 லட்சம் கேட்டு மறுபடியும் மேனேஜருக்கு போன் செய்து மிரட்டியுள்ளனர்.
இதற்கு பிறகுதான், அந்த நிறுவன மேனேஜர் பிரனவ் என்பவர், கோடம்பாக்கம் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை துவக்கினர்.
அவர்களின் செல்போன் நம்பரை வைத்து டிரேஸ் செய்தனர். ஆனால், அதற்குள் கிரிதரனும் சுவேதாவும் பால்ஜோசப்பை தேனாம்பேட்டை சிக்னல் அருகே நடுராத்திரி காரில் கொண்டு வந்து இறக்கிவிட்டு தப்பி உள்ளனர். பால்ஜோசப் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
ஆனால், சம்பந்தப்பட்ட அந்த கிரிமினல் ஜோடியை காணோம்.. இந்த கடத்தல், மிரட்டல் சம்பந்தமாக ஸ்வேதா உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தேடியும் வருகிறார்கள்.
ஸ்வேதாவும் கிரிதரனும் கணவன் மனைவியாம். இவர்கள் போலியான கம்பெனி எதுவென்று பார்த்து பாலிசி எடுத்து மோசடியிலும் ஏமாற்றுவது இவர்களின் வாடிக்கையாக இருந்துள்ளது. அந்த வகையில், இன்ஸ்சூரன்ஸ் நிறுவனமே போலியானது என்று சொல்லப்படுகிறது. எனினும் முழு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.