50 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பதுக்கிய தில்லியைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை, மறுபுறம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என முழு நாடும் அல்லாடிக்கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக ஆக்ஸிஜன் சப்ளையை துரிதப்படுத்தும் நோக்கில் விமானப் படையின் விமானங்களை பயன்படுத்தி வான் வழியாகவும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஆக்ஸிஜனை பதுக்கி வியாபாரம் செய்து வந்த நபரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தில்லியின் தாஷ்ராத்புரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து சிறிய அளவிலான ஆக்ஸிஜன் சிலிண்டரை ரூ.12,000க்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
அவரிடமிருந்து 32 பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், 18 சிறிய சிலிண்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.