வேறோரு பெண்ணின் புகைப்படத்தை தனது புகைப்படம் என்று கூறி அந்த பாட்டி செய்த அட்டுழியம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கால் ஒன்று வந்துள்ளது. முதலில் யார் பேசுவது என்று தெரியாமல் பேச ஆரம்பித்த அவர், அதில் பேசிய பெண்ணின் அழகான குரலுக்கு மயங்கியுள்ளார். இதனால் அவர் அந்த பெண்ணிற்கு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
சில நாட்கள் கடந்த நிலையில், தனது அழகான புகைப்படத்தை அனுப்புமாறு அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். அதனால், அந்த பெண்ணும் தனது புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய போது அவரது குரல் மட்டும் இல்லாமல் அவரும் பேரழகு என்று அந்த இளைஞர் அந்த பெண்ணை தீவிரமாக காதலிக்க தொடங்கினார்.
மேலும், தான் திருமணம் செய்தால் இந்த பெண்ணை மட்டும் தான் திருமணம் செய்வேன் என்று அந்த இளைஞன் அவரது குடும்பத்தினரிடம் கூறியதால் தனது மகன் ஆசைப்பட்டு விட்டான் என்பதற்காக அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதனால், நாம் நேரில் சென்று பெண்ணின் பெற்ரோரிடம் முறைப்படி பேசி திருமணம் நிச்சயம் செய்வதற்கு முடிவு செய்தனர். அதன் படி, அந்த இளைஞர் அந்த பெண்ணின் முகவரியை தேடிக் கண்டுபிடித்து, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரில் சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண் கொடுத்த முகவரியில், சுமார் 65 வயதான மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார். முதலில், அந்த இளைஞர் அவர் தனது காதலியின் பாட்டியாக இருக்கலாம் என்று நினைத்துள்ளார். பின்னர், அந்த மூதாட்டியிடம் அவர் பேசிய பிறகு தான் தான் ஏமாற்ற பட்டது தெரியவந்துள்ளது.
மேலும், தனக்கு செல்போனில் அனுப்பப்பட்ட படமானது, அந்த மூதாட்டியின் இளமைக்கால படம் என அந்த இளைஞர் நினைத்துள்ளார். இதனால் அவரது குடும்பத்னர் மற்றும் நண்பர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் விரக்தி அடைந்த அந்த இளைஞர் தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தையும், இளம்பெண்ணின் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்து, இதுபோல் அவரிடம் வேறு யாரும் ஏமாற வேண்டாம் என்று பதிவிட்டார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அந்த பதிவில் இருந்த இளம்பெண்ணின் புகைப்படமானது, அந்த மூதாட்டியின் இளமைக்கால புகைப்படம் கிடையாது,
அது தங்களது குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் புகைப்படம் என்று கூறி, மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர், மூதாட்டி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த மூதாட்டி, பணிப்பெண்ணாக வேலை செய்த வீட்டில் உள்ள இளம்பெண்ணின் படத்தை வாட்ஸ்-அப்பில் இளைஞருக்கு அனுப்பி ஆசையாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மூதாட்டியை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பிய நிலையில், சமூக வலைதளத்தில் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டதற்காக அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.