தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கக் கோரிய ஸ்டெர்லைட்டின் மனு உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப் பட்டது.
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் நேற்று சம்மதம் தெரிவித்த நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் இத்தகைய அனுமதியை அளித்துள்ளது.
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்து உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட்டை கண்காணிக்கும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த 3 சுற்றுச்சூழல் நிபுணர்கள் இடம்பெறுவர் என்று கூறியது.
அப்போது, ஆக்சிஜன் உற்பத்தியை காரணமாக வைத்து, ஆலையில் வேறு எந்த அலகையும் இயக்கக் கூடாது என்று, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.
அதே நேரம், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்தையும் மத்திய அரசிடமே வழங்க வேண்டும். மத்திய அரசுதான் தேவையை அளவிட்டு மாநில அரசுகளுக்கு வழங்கும் என்று ஸ்டெர்லைட் வழக்கில் மத்திய அரசு வாதிட்டது.
அப்போது, தங்களுக்கு அனுமதி வழங்கினால் அடுத்த பத்து நாட்களுக்குள் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கி விடுவோம் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்தது. ஒரு நாளைக்கு 200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தயாரிக்க முடியும் அதனை யாரிடம் கொடுக்கச் சொல்கிறீர்களோ அவர்களிடம் கொடுத்து விடுகிறோம் என்று, வேதாந்தா நிறுவனம் தகவல் தெரிவித்தது.