நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய அலையை காட்டிலும் இரண்டாவது அலையில் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வயது வரம்பின்றி பலரும் இந்த கொடிய வைரஸால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மராட்டிய மொழி சினிமாவின் புகழ்பெற்ற நடிகையான அபிலாஷா பாட்டீல் கொரோனாவால் உயிரிழந்துள்ளது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரணாசியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டுவிட்டு மும்பையிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு திரும்பியுள்ளார் நடிகை அபிலாஷா. அப்போது அவருக்கு கடும் காய்ச்சலும், உடலில் சோர்வும் இருந்துள்ளது.
இந்நிலையில் அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கடந்த புதன்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த நடிகை அபிலாஷாவுக்கு கணவன் மற்றும் ஒரு மகனும் உள்ளனர்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான ‘சிச்சோரே’ படத்தில் அவர் ஏற்று நடித்த செவிலியர் வேடம் பல தரப்பினர் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது.
அதேபோல குட் நியூஸ், பத்ரிநாத் கே துல்ஹனியா என இந்தியளவில் வரவேற்பு பெற்ற படங்களிலும் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
நடிகை அபிலாஷாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரபல மராட்டிய சினிமா நடிகர், சஷாங்க் உதர்புகார், “இந்திய சினிமா மிக திறமையான நடிகையை இழந்துவிட்டது.
அவருடன் ‘பிராவாஸ்’ என்கிற படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பாக்கியமாக கருதுகிறேன். அவருடைய ஆத்மா அமைதி கொள்ளட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.