தகன மயானங்களின் வெளியே நீண்ட வரிசையில் இறந்தவர்களின் உடலோடு நிற்பதை தவிர்க்க, ஆன்லைனில் தகன இடத்தை முன்பதிவு செய்யும் வலைதளம் ஒன்றை நாசிக் மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் பாதிப்பு மிகவும் கொடூரமாக உள்ளது.
தற்போது கொரோனாவால் தினமும் சுமார் 4 ஆயிரம் பேர் பலியாகி வருகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா உயிரிழப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் நாசிக் மாநகராட்சியில் அந்த பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய தகன மயானங்களின் வெளியே சடலங்களோடு உறவினர்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்
இவர்களின் சிரமங்களை குறைக்கும் நோக்கில் நாசிக் மாநகராட்சி வலைதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக நாசிக் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை இயக்குனர் டாக்டர் கல்பனா குட் கூறுகையில், ஆன்லைனில் தகன இடங்களை கண்டுபிடிப்பதில் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் வலைத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வலைதளம் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கான நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்ய பயனாளர்களுக்கு உதவுகிறது.
மேலும் தகன மயானங்களுக்கு வெளியே நீண்ட வரிசைகள் நிற்பதையும் கட்டுப்படுத்தும் என தெரிவித்தார்.