இரண்டாம் கொரோனா அலையில் பலருக்கு நடத்திய சளி பரிசோதனையில், ‘நெகட்டிவ்’ என காண்பிக்கும் முடிவுகள், சிடி ஸ்கேன் பரிசோதனையில் ‘பாசிட்டிவ்’ என காட்டுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நபர்களால் பிறருக்கு தொற்று பரவும் என்பதால், வெளியே செல்லாமல் வீட்டினுள் இருப்பதே, இப்போதைக்கு பாதுகாப்பு. தடுப்பூசி, பரிசோதனை மையங்களில் போலீசாரை நியமித்து, சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை, உறுதி செய்தாக வேண்டும்.
கொரோனா தொற்று கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், கொரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தினசரி பல ஆயிரம் மக்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், முகாம்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இப்போது ரெம்டெசிவீர் மருந்து வாங்கவும், கூட்டம் கூடுகிறது. பரிசோதனைக்காக வரும் மக்கள் பலர், இன்னும் முக கவசத்தை முறையாக அணியாமல் இருக்கின்றனர். கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில், சமூக இடைவெளி பின்பற்றப்படுவது கிடையாது. இரண்டாம் அலையில், யாரிடம் தொற்று இருக்கும் என்று, யாருக்கும் தெரியாது.
பலருக்கு பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என முடிவு வந்தாலும், சிடி ஸ்கேனில் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிவதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். சிடி ஸ்கேன் எடுக்காதவர்கள், தங்களுக்கு தொற்று இல்லை என கருதி, தடுப்பூசி போடும் இடங்கள், பரிசோதனை முகாம்களுக்கு வரக்கூடும்.
ஆகவே, சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். டபுள் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். போலீசாரை நியமிக்க வேண்டும். பரிசோதனை மையங்கள், தடுப்பூசி மையங்களில், பணியாற்றும் ஊழியர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. அறிவுறுத்தினாலும் எவரும் கேட்க தயாரில்லை. ஆகவே, இம்மையங்களில் போலீசாரை பணியமர்த்தி, சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை பின்பற்ற, கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும்.
மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள், முந்தைய தினமே முகாம் நடக்கும் இடம், நேரம் குறித்து, மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இப்படி, ஒவ்வொரு விஷயத்திலும் அனைவரும் ஒருங்கிணைந்து, பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவை ஒரேடியாக ஒழிக்க முடியும்.
அரசின் தளர்வுகளை பயன்படுத்தி, பொது இடங்களுக்கு தேவையின்றி செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் போது, கண்டிப்பாக இரட்டை முககவசம் அணிய வேண்டும். அதில் ஒன்று சாதாரண மாஸ்க்கும், மற்றொன்று ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் சர்ஜிக்கல் மாஸ்க் ஆகவும் இருக்க வேண்டும். சர்ஜிக்கல் மாஸ்க்கை உள்ளேயும், சாதாரண மாஸ்க்கை வெளியேயும் அணிய வேண்டும்.* இரண்டு சர்ஜிக்கல் மாஸ்க்கோ, இரண்டு துணியால் ஆன மாஸ்க்கோ அணிய கூடாது; அது, சரியான பிட்டிங் அளிக்காததால், பாதுகாப்பு உத்தரவாதமல்ல என்கின்றனர், தொற்று நோயியல் நிபுணர்கள்.
குறிப்பாக, வங்கி மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க முடியாதவர்கள், இந்த டபுள் மாஸ்க் நடைமுறையை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். சர்வதேச அளவில் நடந்த ஆராய்ச்சியின் முடிவில், டபுள் மாஸ்க் அணிவதே பாதுகாப்பானது என தெரியவந்துள்ளது. எண்95 மாஸ்க் அணிபவர்கள், டபுள் மாஸ்க் அணிய வேண்டியதில்லை
மாநகராட்சி மருத்துவர் தினேஷ் பெரியசாமி கூறியதாவது: அறிகுறி இல்லாதவர்களுக்கும் கொரோனா தொற்று உள்ளது. டெஸ்ட் எடுத்து, நெகடிவ் என வந்தவர்களுக்கும் சிடி ஸ்கேனில் பாசிட்டிவ் என இருக்கிறது.
பயத்தில் டெஸ்ட் எடுக்காமல், பலர் சுற்றிக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் மூலம்தான் அதிகம் தொற்று பரவுகிறது. டெஸ்ட் முடிவுகள் வர, மூன்று நாட்களுக்கு மேல் ஆகிறது. அதுவரை வெளியில் சுற்றுகின்றனர். இவர்கள் மூலம் பலருக்கு தொற்று பரவி விடுகிறது.
இதை தடுக்க, சளி, காய்ச்சல் என, யார் வந்தாலும் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். டெஸ்ட் ரிசல்ட்டை விரைவாக வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.