ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட புகாரில் கைது செய்யப்பட்ட மதுரை இளைஞர் செந்தில்குமார் என்ற முகமது இக்பால் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 7 மணிநேரம் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் பென் டிரைவ், சிம் கார்டு உள்ளிட்ட 16 ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் இக்பாலுடன் தொடர்பில் இருந்த திருப்பூர் இளைஞரிடமும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர்.
மதுரை காஜிமார் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்ற முகமது இக்பால் கடந்த ஆண்டு தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், தூங்கா விழிகள் ரெண்டு காஜிமார் தெருவில்.. என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தொடர்பாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கபட்டது.
இந்த பதிவை வெளியிட்ட இக்பாலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.-க்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து இக்பாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மதுரையில் காஜிமார் தெரு, கே. புதூர், பெத்தானியாபுரம், மகபூப்பாளையம் ஆகிய பகுதிகளில் கேரளாவில் இருந்து வந்திருந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர்.
இக்பால் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் நடந்த இந்த சோதனை பிற்கபல் 1 மணி வரை நீடித்தது. இந்த சோதனையின் போது பென் டிரைவ், சிம் கார்டுகள் உள்ளிட்ட 16 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் திருப்பூரை சேர்ந்த இளைஞருடன் அதிக நேரம் இக்பால் உரையாடி இருந்தார். இதனையடுத்து திருப்பூரை சேர்ந்த அந்த இளைஞரிடமும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் திருப்பூர் இளைஞர் விடுவிக்கப்பட்டார்