தமிழர்கள் என்ற அடிப்படையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்வதில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் கொலையாளிகள் ஏழு பேரும் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அவர்கள், தங்களை விடுவிக்கக் கோரி அளித்த கோரிக்கைகள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி அளித்த பரிந்துரையை ஏற்று, ஏழு பேருக்கான தண்டனையில் விலக்கு அளித்து உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று, குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக.,வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இதற்கு என்ன கருத்து தெரிவிக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் வகையில், கே.எஸ்.அழகிரி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்…
‘முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை. அவர்களுடைய கருத்தை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலேயே 7 பேர் விடுதலை பற்றி சொல்லியிருக்கிறார்கள். எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தவில்லை. எனவே எங்கள் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ எனத் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.